Tuesday, June 28, 2011


Tuesday, June 28, 2011


"சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

-கலையரசன்- 

வட ஐரோப்பாவின் பூர்வ குடிகளான சாமி இன மக்களின் தாயக பூமி, நான்கு நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப் பட்டுள்ளது. இன்று வரை, சாமி மக்களுக்கென்று தனியான நாடு கிடையாது. சாமி மக்கள் உரிமை கோரும் சாப்மி நாட்டை, ஐ.நா. அங்கீகரிக்கக் கோரி யாரும் போராடியதும் இல்லை. கடந்த 600 வருடங்களாக ஒடுக்கப்பட்ட இனம். ஒரு காலத்தில், அந்த மக்கள் தமது தனித்துவமான மொழியைப் பேசுவது கூட தடை செய்யப் பட்டிருந்தது. இன்றைய ஜனநாயக அரசுகள், கலாச்சார சுதந்திரம் வழங்கியுள்ளன. இருந்தாலும், பெரும் வணிக நிறுவனங்கள் அந்தப் பிரதேச வளங்களை சுரண்டுவதை தடுக்கவில்லை. ஐரோப்பாவின் அடக்கப்பட்ட சிறுபான்மை இனங்களில் ஒன்றான சாமிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் இது.

நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வட துருவத்தை அண்டிய பகுதிகளில் சாமி இன மக்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினராக வாழ்ந்த சாமிகளின் வாழ்விடம், வந்தேறு குடிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இன்று வளர்ச்சி குன்றிய, மனித நடமாட்டம் குறைந்த ஆர்க்டிக் வட்டத்திற்குள் மட்டும் சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த நகரங்களில் பெரும்பான்மையின சமூகம் குடியேறி வருகின்றது. பூர்வ குடிகளான சாமிகள், நாட்டுப்புறங்களில் மட்டும் ஒதுங்கி வாழ்கின்றனர். ஸ்கண்டிநேவிய நாடுகளின் கடந்த ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில், ஒரு சிறுபான்மை இனத்தின் இருப்பு மறைக்கப் பட்டு வந்துள்ளது. இன்றும் கூட, அந்த நாடுகளின் மக்கள் ஒரே தேசிய மொழியை பேசுவதாகத் தான் வெளியில் உள்ள மக்கள் கருதுகின்றனர். மிக அண்மைக் காலத்தில் தான், சாமி மக்களின் கலாச்சார அடையாளங்கள் அங்கீகரிக்கப் பட்டன.

முதன் முதலாக, 12 ம் நூற்றாண்டின் நோர்வீஜிய (அல்லது டேனிஷ்) இலக்கியங்கள் சாமி மொழி பேசும் மக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. நோர்வீஜியர்கள் அவர்களை "பின் (Finn) மக்கள்" என்று அழைத்தனர். தற்போதும் சாமி மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமுனையில் உள்ள மாகாணம் பின்மார்க் என்று அழைக்கப் படுகின்றது. பின்லாந்து என்ற பெயரும் அவ்வாறே வந்திருக்கலாம். ஏனெனில், சுவோமி என்ற இயற்பெயரைக் கொண்ட பின்லாந்து மக்கள் பேசும் மொழிக்கும், சாமி மொழிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அநேகமாக, புராதன காலத்தில் இருந்து நாடோடி சமூகமாக வாழும் மக்கள், தமது பண்டைய மொழியான சாமியை பேசி வந்திருக்கலாம். விவசாய சமூகமாக நாகரீகமடைந்த மக்கள், பின்னிஷ் மொழியை தனியாக வளர்த்தெடுத்திருக்கலாம். மொழியியல் அறிஞர்களால் "பின்னோ-உங்காரிய" மொழிக்குடும்பம் என்று அழைக்கப் படுகின்றது. சாமி மட்டுமல்ல, பின்னிஷ், கரேலியா, எஸ்தோனியா, ஹங்கேரியா போன்ற மொழிகளும் இந்தக் குடும்பத்தை சேர்ந்தவை. பிற ஐரோப்பிய மொழிகளுடன், ஒரு சொல் கூட ஒற்றுமையற்ற தனித்துவமான மொழிகள் அவை. சொற்கள் மட்டுமல்ல, இலக்கண வடிவம் கூட வித்தியாசமானது. அநேகமாக, இன்றைய ஐரோப்பிய சமூகங்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்த இனங்களாக இருக்கலாம்.

வட ஐரோப்பாவில் வாழும் சாமி மக்களின் மொத்த எண்ணிக்கை 60000 - 100000. அதிலும் பல்வேறு மொழிப் பிரிவுகள் உள்ளன. பொதுவாக, நாடுகளின் எல்லைகள் அவர்களின் வாழ்விடங்களை பிரித்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளில் வாழும் சாமி இன மக்களுக்கு இடையிலான தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்துள்ளன. இவர்கள் தமது மொழிக்கான எழுத்து வடிவத்தை லத்தீன் அடிப்படையில் அமைத்துள்ளனர். அரிச்சுவடியில் சில விசேட வரி வடிவங்களும் உள்ளன. இதற்கு மாறாக, ரஷ்யாவை சேர்ந்த சாமிக்களின் மொழி, ரஷ்ய எழுத்துக்களைக் கொண்டு எழுதப் படுகின்றது. முன்பு பனிப்போர் காரணமாக, அவர்களுடனான உறவு துண்டிக்கப் பட்டிருந்தது.

குளிர்காலத்தில், - 40 பாகை செல்சியஸ் வரை உறையும் காலநிலைக்கு ஏற்றவாறு, சாமி மக்கள் வாழப் பழகியுள்ளனர். "லவ்வு" என அழைக்கப்படும் எளிமையான கூடாரங்களே அவர்களது வாழ்விடங்கள். அந்தப் பிரதேசத்தில் மட்டும் காணப்படும் துருவ மான் (Reindear) வளர்ப்பு தான், அவர்களது வாழ்க்கைக்கு ஜீவநாடி. மான் பிடிப்பது எப்படி என்று, சிறு குழந்தையில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். நமது ஊரில் மாடு வளர்ப்பதைப் போல, இவர்கள் துருவ மான்களை பிடித்து பட்டிகளில் அடைத்து வளர்ப்பார்கள். அந்த விலங்கினத்தின் இறைச்சி, பால், உணவாகப் பயன்படுகின்றது. அதன் தோலை எடுத்து, குளிருக்கேற்ற உடையாகவும், காலணியாகவும், அல்லது படுக்கை விரிப்பாகவும் தயாரிக்கின்றனர். சுமார் ஆறு மாத காலம், பனியால் உறைந்து போயிருக்கும் நிலத்தில் போக்குவரத்திற்கும் மான் பயன்படுகின்றது. பனியில் சறுக்கும் வண்டிலை மான்கள் இழுத்துச் செல்லும். நீங்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். உண்மையில் துருவப் பகுதி பழங்குடியினரான சாமி மக்களின் அடையாளம் தான் அது. கிறிஸ்துமஸ் தாத்தாவை சர்வதேச வணிகச் சின்னமாக்கிய ஐரோப்பியர்கள், அவரின் "உறவுக்கார சாமிகளை" அடக்கி ஒடுக்கினார்கள்.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ரஷ்ய சாமிகள், கூட்டுறவுப் பண்ணைகளில் மான்களை வளர்க்குமாறு வற்புறுத்தப் பட்டனர். சாமிக்களின் சமுதாயம் ஓரளவு பொதுவுடமைப் பொருளாதாரம் சார்ந்தது. இருப்பினும் சில வேறுபாடுகளும் இருக்கவே செய்தன. குறிப்பாக நாடோடி வாழ்க்கை கட்டுப்படுத்தப் பட்டது. ஓரிடத்தில் நிலையாக தங்க வைக்கப்பட்டனர். பண்ணையின் வருமானத்தின் ஒரு பகுதி அரசுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு பிரதியுபகாரமாக, முதன் முறையாக சாமியின பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் கட்டப்பட்டன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் வந்த முதலாளித்துவ அரசு, பண்ணைகளுக்கு சொந்தம் கொண்டாடியது. தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. ஆனால், சாமி இனத்தவரின் கம்பனிகள் கேட்ட பொழுது அதிக விலை கூறியது. அதே நேரம், ரஷ்ய இனத்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றது. இன்றைய ரஷ்யாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சாமி மக்கள், மதுவுக்கு அடிமையாகவுள்ளனர். சாமி பிரதேசத்தில் பெரிய நகரமான மூர்மன்ஸ்கில் அவர்களின் எண்ணிக்கை 1 % மட்டுமே! கனிம வளத்தை உறிஞ்சும் பெரு நிறுவனங்கள் சாமிகளின் பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளன. அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகின்றது.

பனிப்போர் காலத்தில் சாமிகளின் வாழ்விடம், இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. எல்லைக்கு அப்பால் இருந்த நோர்வே நேட்டோ கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இதனால் சோவியத் படைகள் அங்கே நிலை கொண்டிருந்தன. ரஷ்ய எல்லையோரம் உள்ள நோர்வேயின் சாமி பகுதியில் நேட்டோ படைகள் தளம் அமைத்துள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக, துருவப் பகுதியில் புதிதாக பெட்ரோலிய, எரிவாயு வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சாமிகளின் தாயகப் பகுதியில் எண்ணைக் கிணறுகள் தோண்டப்படும். இதில் கிடைக்கும் வருமானம் நேரடியாக சாமி மக்களுக்கு போய்ச் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பாவின் பணக்கார நாடான நோர்வேயிலும், வட பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. கரையோரத்தில் மீன்பிடியும், உள்நாட்டில் மான் வளர்ப்புமே, அந்தப் பகுதி மக்களின் வருமானம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தான், வட நோர்வேயின் பொருளாதாரம் சேவைத் துறைக்கு மாறியது. அதன் காரணமாக, சில சாமிகளும் கல்வியறிவு பெற்று முன்னேறினார்கள். ஐம்பதுகளில், அல்லது அறுபதுகளில் சாமி மத்தியதர வர்க்கம் உருவானது. அப்போதிருந்து சாமி தேசியவாதமும் வளர்ந்தது. ஒன்றிணைந்த சாமி மக்களின் தேசத்திற்கு "சாப்மி" (Sápmi) என்று பெயரிடப் பட்டது. அதற்கென தனியான தேசியக்கொடியும் உருவானது.

1987 ல், நோர்வே அரசு சாமி பாராளுமன்றம் அமைக்க அனுமதி வழங்கியது. வட நோர்வேயில் கரஷோக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றம் Sámediggi என்று அழைக்கப் படுகின்றது. நோர்வேயை பின்பற்றி, சுவீடனும், பின்லாந்தும், சாமி மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து பாராளுமன்றம் அமைத்துக் கொடுத்தன. இருப்பினும் இந்தப் பாராளுமன்றங்கள், தொலைக்காட்சி கமேராக்களுக்கு முன்னால் நடக்கும் விவாத மேடையாக மட்டுமே செயற்படுகின்றன. பெரிதாக அதிகாரப் பரவலாக்கல் எதுவும் நடக்கவில்லை. இன்று சாமி பிரதேசங்களில், ஆரம்ப பாடசாலைகளில் சாமி மொழியில் கல்வி புகட்டப் படுகின்றது. நோர்வேயின் தொலைக்காட்சி தனியாக சாமி மொழி சேவை ஒன்றை நடத்துகின்றது. இது போன்ற கலாச்சார சுதந்திரம் காணப்பட்டாலும், பொருளாதாரத் தேவைகளுக்காக ஆதிக்க மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் போன்று, ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான கூட்டமைப்பு ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தக் கூட்டமைப்பில் டென்மார்க்குக்கு சொந்தமான பாரோ தீவுகள், கிரீன்லான்ட், மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான ஒலான்ட் தீவுகள் என்பனவற்றிற்கு தனியான சுயாட்சி அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. சாமிகளின் சாப்மி தேசத்திற்கு அது போன்ற அந்தஸ்து எதுவும் கிடையாது.

இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1. The Saami language - An introduction (Pekka Sammallahti)
2. Sámit, sánit, sátnehámit (Suomalais-Ugrilainen Seura,Helsinki)
3. Becoming Visible, Indigenous Politics and Self-Government (Centre for Sami Studies)

துயர் ஒன்று பகிர்வோம்

  தோழர். நாகேந்திரம்  சமூகக்கல்வி ஆசிரியர் அவர்கள் 
இயற்கை எய்திய செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது... அன்னார் 26.06.2011 அன்று கொழும்பில் காலமானார். 
அன்னார் அமரத்துவம்   அடையவேண்டி அஞ்சலி க்கின்றோம்  .
  

Sunday, June 26, 2011

ஜீவா -85

ஜீவா -85 இன்றைய பார்வையில்   
-மேமன் கவி -
 


மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா இன்று 85 வது பிறந்த நாளை காண்கிறார். 85 வயது என்பது ஒரு தனிநபரின் ஆயுளை பொறுத்த வரை ஒரு சாதனை என்றாலும், டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியின் 85 வயது என்பது முக்கியத்துவம் பெறுவதற்கு காரணங்கள் பன்முகப்பட்டவை.




1. அவர் சார்ந்திருக்கும் சமூகம். அச்சமூக கட்டமைப்பு எதிர் கொண்ட ஒடுக்கு முறை, அதன் அதன் காரணமாக அச்சமூகம் இயக்கரீதியாக  தரித்துக் கொண்ட போராட்ட பாத்திரம்,  அப்போராட்ட பாத்திரத்திற்கான அச்சமூக இயக்கம் சார்ந்திருந்த கருத்தியல் நிலை.

2. 40 வருடங்களுக்கு மேலாக தனிமனிதனாக ஒரு கலை இலக்கிய சிறுசஞ்சிகை நடத்தி வருகின்றமை.

கலை இலக்கியவாதிகளின் வரலாறுகளை நாம் எடுத்து பார்தோமானால், அவர்கள் சமூகத்திற்கு ஏதாவது சொல்லவேண்டும் என்ற  ஆர்வத்தின் காரணமாகவும், கலை இலக்கியத்தின் மீதான தணியாத ஆர்வத்தின் கராணமாகவும் கலை இலக்கிய்த்துறை மீதான பிடிமானத்தின் காரணமாக அத்துறையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். அதேவேளை அரசியல்,சமூக போராட்ட இயக்கங்களில் ஈடுபட்டு, அவையின் தேவையின் காரணமாக கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள். இலங்கை தமிழ் சூழலில் அவ்வாறான பல படைப்பாளிகளை நாம் இனங்காட்டலாம். அத்தகையவர்களில் ஒருவர்தான் டொமினிக் ஜீவா அவர்கள்.

ஜீவா நான் சார்ந்நிருக்கும் சமூகம் எதிர் கொண்ட ஒடுக்கு முறை எதிரான இயக்க செயற்படாட்டின் ஊடாக, அப்போராட்டத்திற்கான வன்மையான ஆயுதமாக கலை இலக்கியம் அமைய முடியும் என்பதை அறிந்துக் கொண்ட பொழுதுதான் அவர் கலை இலக்கியத்துறையில் நுழைகிறார். அவரது அப்பணியின் முதற் கட்ட்மாக படைப்பாக பணியில் ஈடுபடுகிறார். அப்பொழுதுதான் அத்தகைய போராட்ட சூழலுக்கான வன்மையான ஆயுதமாக பயன்படும் கலை இலக்கியத்திற்கு ஒரு பிரசுர களம் தேவை என உணர்கின்ற பொழுதுதான் அவரது தனித முயற்சினால் மல்லிகை என்ற கலை இலக்கிய சஞ்சிகை தோற்றம் பெறுகிறது.


ஈழந்து சிறுசஞ்சிகை வரலாற்றை எடுத்துக் கொண்டால், பல்வேறு கலை இலக்கிய இயக்கங்கள் வழியாகவும், பல சஞ்சிகை வெளிவந்து இன்னும் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன. அதே காலகட்ட்த்தில் தனிமனித முயற்சிகளாக பல சிறுசஞ்சிகைகள் வெளிவந்துள்ளதையும் இங்கு நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், பொதுவாகவே அச்சிறுசஞ்சிகை முயற்சிகள் அவை இயக்க ரீதியாக வெளிவந்திருப்பினும் சரி, தனிமனித முயற்சிகளாக வந்திருப்பினும் சரி, சிறுசஞ்சிகைகள நடத்துவதில் உள்ள சிரம மங்கள் என்பது வெறுமனே பெருளாதாரத்துடன் மட்டுமே சம்பந்தவைபட்டவை அல்ல. அதற்கு அப்பால், அவ்வியக்கங்களும் சரி, அத்தனிமனிதர்களும் சரி, அவையோ அவர்களோ கொண்டிருக்கும் கருத்துநிலையும், அக்கருத்து நிலைகளின் சமூக பெறுமானம், தேவை, அவை சந்திக்கும் நெருக்கடிகளும்தான் தான் அச்சஞ்சிகைகளின் ஆயுளை நிர்ணயம் செய்து இருக்கின்றன.


ஆனால் ஜீவாஅவர்களை பொறுத்தவரை. பிற்காலத்தில் அவர் சார்ந்திருந்த அரசியல் சமூக போராட்ட இயக்கத்தையும். அவர் சார்ந்திருந்த கருத்தியலையும் மேவி, ஈழத்து சமூக அரசியல் சூழலில் பல்வேறு நெருக்கடிகள், மாற்றங்கள் நிகழ்ந்த பொழுதும், அர்சார்ந்நிருந்த அரசியல் சமூக போராட்ட இயக்கத்தினதும், அவர் சார்ந்திருந்த கருத்தியலினதும் தேவையை நிலை நாட்டுவதற்கான, தக்க வைப்பதற்கான உணர்வுபூர்வமான நீட்சியினை அசையாத நம்பிக்கையுடன் மல்லிகையை 46 வருடங்களாக மேலாக, தனிமனிதனாக நின்று வெணிக்கொணர்ந்து-அதற்கான  படைப்பாளிகளின் வட்டத்தினரை உருவாக்கி அடையாளப்படுத்தி  அந்த நீட்சியினை தக்க வைத்திருக்கும் சாதனைதான்- அவரது சமகாலத்தவர்களிடமிருந்து அவரை பிரித்துக் காட்டும் முக்கியத்துவமாக இருக்கிறது.

ஜீவா வின் இத்தகைய முக்கியத்துவத்தை அறிந்துக் கொண்டவர்கள் யார்?
அவரது சமகாலத்தவர்களும்,அம்முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொண்ட ஜீவாவுக்கு அடுத்து வந்த ஒரு தலைமுறையினரும்தான்.
இவ்விரு அணியினரும் ஜீவா பற்றி பேச தருணங்கள் வந்த பொழுதெலாம் 46 வருடங்களாக தனிமனித நிலை நின்று, பல சொந்த நலன்களை அர்ப்பணித்து ஒரு சிறுசஞ்சிகை சாதனையாளர் என்றுதான் அடையாளப்படுத்தி , அழுத்திச் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால், டொமினிக் ஜீவா என்ற படைப்பாக்க பங்களிப்பை  இன்று பேசுவதே பேசுவதே இல்லை.(இக்காகட்டத்தில் கல்வித்துறையில்  குறிப்பாக பல்கலைகழ மட்ட்த்தில் டொமினிக் ஜீவா என்ற படைப்பாளி பற்றி அவர்தம் படைப்புகளை பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன்  என்பதும்  இங்க குறிப்பிட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஆனாலும் அந்த ஆய்வுகளின் பற்றிய அறிதல் என்பது கல்வித்துறை சார்ந்தவருகளுடன் அடங்கி விடுகிறது என்பதால் அதனை பற்றி இங்கு விரிவாக பேசவில்லை)
அதாவது ஜீவா என்ற மனிதர் தன் சொந்த நலன்க்ளை தியாகம் செய்து 46 வருடங்களாக மல்லிகை என்ற சிறுசஞ்சிகையை நடத்தி வந்துள்ளார் என்று சொல்வதில் இன்னுமொரு சொல்லாடல் சேர்ந்து கொள்ளபடவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இருக்கிறது. டொமினிக் ஜீவா என்ற தனிமனிதர் நன் சொந்த நலன்களை மட்டுமே  தியாகம் செய்து 46வருடங்களாக  வருடங்களாக இந்த மல்லிகை  கொண்டு வரவில்லை அத்தோடு சேர்த்து டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியையும் தியாகம் கொடுத்துதான் இந்த மல்லிகை நடத்தி வந்துள்ளார் என்பது எடுத்து சொல்லப்படவேண்டும் அதாவது இரட்டை அர்ப்பணிப்பு. ஒன்று சொந்த நலன் அடுத்து டொமினிக் ஜீவா என்ற படைப்பாளி. அதுசம்பந்தமான அதாவது மல்லிகை என்ற சிறுசஞ்சிகை க்காக டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியை  என தியாகம் கொடுத்தீர்கள் என ஜீவா அவரிடம் கேட்டால், அவரது பிரபலமான ஒரு மேற்கோளால் எமது வாயை அடைத்து விடுவார். ‘’ ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடியும் என்பதாக.
ஆக அவ்விரு அணியினர் ஜீவாவின் படைப்பாக்க முயற்சிகளை பற்றி முக்கியத்துவம் கொடுத்து இன்று பேசவில்லை என்பதற்காக அவர்களையும் குறை கூற முடியாது. ஏனெனில் ஜீவா அவர்கள் நீண்ட படைபாக்கங்களை தரவில்லை. அது உண்மை என்றாலும்,  குறைந்த பட்சம் ஜீவாவின் கால படைப்பாக்க பங்களிப்பை பற்றி பேசவந்து இருக்க்லாம் அல்லவா?

சரி, இந்த நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட் பக்க் விளைவு என்ன்?
இன்றைய இளையத் தலைமுறை கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள்  மத்தியில்,டொமினிக் ஜீவா என்பது 46 வருடங்களாக தனிமனி நிலை நின்று சொந்த நலன்களை தியாகம் செய்து மல்லிகை என்ற சிறுசஞ்சிகையின் ஆசிரியர். அதாவது டொமினிக் ஜீவா  என்பவர் ஒரு சிறுசஞ்சிகையாளர்  அவ்வளவுதான். அத்தகைய ஒருபடிம மே இளையத் தலைமுறையினரிடம் பதிந்து விட்ட்து. ஆனால் ஜீவா அவர்களின் படைப்பாக்க  பங்களிப்புடன் இணைத்து பேச பட்டிருந்தால், இன்றை இளையத் தலைமுறை கலை இலக்கிய  செயற்பாட்டளர்களுக்கு, மத்தியில் டொமினிக் ஜீவா  ஒரு படைப்பாளியாக  அறிமுகமாகி இருப்பார்.அத்தோடு அந்த இளையத் தலைமுறையினரும் அவர் தம் படைப்பாக முயற்சிகளின் தரம், அதற்கு தே வையான  வழிகாட்டல் போன்றவற்றை,  டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியின் ஆக்க இலக்கிய இயக்க  வளர்ச்சி வழியாக பெற்றிருப்பார்கள்.
உதாரணத்திற்கு,  ஒன்று சொல்லாம். இலங்கை சாகித்திய மண்டல  பரிசை ப்ற்று க் கொண்ட முதலாவது தமிழ் சிறுகதைத் தொகுப்பு டொமினிக் ஜீவாவின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான தண்ணீரும் கண்ணீரும் ஆகும். இதனை நான் சாகித்திய பரிசு என்பதற்காக கூறவில்லை. மாறக. டொமினிக் ஜீவா என்ற படைப்பாளி அன்று பெற்றிருந்த செல்வாக்கை,  எடுத்துக்காட்டும் ஒருதகவலாக கூறுகிறேன்..

(தொடரும்1

Saturday, June 25, 2011

Realisation

Realisation

-Agostinho Neto-

Fear in the air!
On each street corner
vigilant sentries light incendiary glances
in each house.
Hasty replacement of the old bolts
of the doors.
In each conscience
seethes the fear of listening to itself.
History is to be told anew!


Fear in the air!
It happens that I
humble man,
still more humble
in my dark skin
come back to Africa,
to myself
with dry eyes. 

The late Agostinho Neto, Freedom Fighter, leader of MPLA and the first President of free Angola, ranks among the greatest poets of modern Africa

Wednesday, June 08, 2011

நூல் வெளியீடு

தோழர் யோகரட்ணம்   அவர்களது 

தீண்டாமைக் கொடுமைகளும் 


தீ மூண்ட நாட்களும் நூல்வெளியீடு




கருத்துரை வழங்குவோர்:

தேவதாசன்
எம்.ஆர்.ஸ்ராலின்
அருந்ததி
சோபாசக்தி 
ராகவன்
பிரபா லோலன் 

ஏற்புரை:
தோழர் யோகரட்ணம் 

விசேட அழைப்பு  
வாசுதேவ நாணயக்காரா


Monday, June 06, 2011


பிறத்தியாள் இரண்டு வருடம் கடந்து 

-கற்சுறா- 


கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் பானுபாரதியின் பிறத்தியாள் கவிதைத் தொகுப்பு. தோழன் விமலேஸ்வரனை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட தொகுப்பு என்பதில் மிக இறுக்கமான வேதனையுடன் மெல்ல பக்கங்களை விரிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நண்பர்களது இழப்பினூடாக தாண்டிக்கொண்டிருந்த தருணங்கள். எந்தவொரு பகலிலும் எந்தவொரு இருளிலும் ஒரு தோழனை ஒரு தோழியை இழந்துகொண்டிருந்தோம். வரலாறு ஈழம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

1980கள் மிகவும் நெருக்குவாரம் நிறைந்த நாட்கள். எங்களில் பலர் சேர்த்துவைத்த அத்தனை தடையங்களும் ஏதோ ஒரு வழியில் காணாமலேயே போய்க் கொண்டிருந்தன. மனங்களில் பதிவாகிய நினைவுகளைத் தவிர இன்று பெரும்பாலும் தடையங்கள் அத்தனையும் அழிந்துதான் போய்விட்டன. இத்தனை காலம் தாண்டி விமலேஸ்வரனை ஒரு கணத்திலேனும் நினைத்துக் கொள்ள வைத்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.


இங்கும் பானுபாரதி அங்கொன்றும் இங்கொன்றுமாக 1980களிலிருந்து எழுதிய கவிதைகள் அவள் தமயந்திக்கு எழுதிய கடிதங்கள் என்று பரவியிருக்கும் இந்தப் பிறத்தியாள், கவிதைகள் குறித்துப் பேசுவதை விட நாம் கடந்து வந்த காலங்களைப் பேசவைப்பது என்பதில் கணிசமான அளவு முக்கியம் பெறுகிறது. இந்தத் தொகுப்பிற்கூடாக நோக்கும் போது பானுபாரதி அவர்களை கவிஞர் என்று என்னால் சொல்ல முடியாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

யுத்தகால வாழ்வில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும், அதுவும் ஈழத்தில் எழுத்துக்களைப் பாதுகாத்தல் என்பதும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களது சர்வாதிகாரத்தில் இருந்து தப்பித்தல் என்பதே வாழ்வாகியிருக்கும் தருணத்தில் எழுத்துக்காக தோழர்கள் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு சிறிய கவிதையை பாதுகாத்தல் என்பது தற்கொலைக்குச் சமனானது. ஆக ஒரு எழுத்தாளனால் தனது எழுத்துக்களை உரிய முறையில் பாதுகாக்க முடியாதுதான் போகும். ஆனால் பானுபாரதியோ ஒரு எழுத்தாளர் என்பதைவிடவும் சமூகச் செயற்பாட்டளியாகவும் போராளியாகவும் இருந்த தருணங்களில் கவிதையைப் பாதுகாத்தல் என்பது அவரது இரண்டாந்தர வேலையாகவே இருந்திருகிறது. அப்போது எழுதப்பட்டவைகள் கவிதைகள் என்பதை விடவும் முக்கியமாக தனக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப்பரிமாற்றமாகவே இருந்திருக்கிறது. ஆனால் நமக்கிடையே வாழும் பல ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் தமது கவிதைகளைப் பாதுகாப்பதையே அந்த யுத்தகாலத்திலும் சரி இன்றுகடைசியாக நடந்த கோரச்சண்டையிலும் சரி முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் பானுபாரதி அவர்களை ஈழத்துக் கவிஞர் என்ற குறுகிய அரியண்டத்தனமான சொல்லால் அழைத்து குறுக்கிவிடமுடியவில்லை.

பெண்களின் உடலும், மொழியும், அரசியல் அபிலாசைகளும், குழந்தைகளும், கனவுகளும் பெண்களுக்கே சொந்தமில்லாத ஒரு போர்க் காலச்சூழலில் கவிதைகள் எழுதுவதற்கும் எழுதிய ஒரு துண்டுக்கவிதையையும் புலிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும், ஆண்களிடமிருந்தும், இன்னும் கவிதைத் திருடர்களிடமிருந்தும் மறைத்து பாதுகாக்க எவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது என்ற உண்மையை இந்தத் தொகுப்பு போட்டுடைக்கின்றது. என்று ஜீவமுரளி எழுதியதில் அவ்வளவு உண்மையிருக்கிறது. ஈழத்துக் கவிதைச்சூழல் அவ்வளவு அசிங்கமானதாய்த்தான் இருக்கிறது.

சிவரமணியையும் அவளது கவிதையையும் செல்வியையும் அவளது கவிதைகளையும் அழித்தவர்கள் நாங்கள் தானே. நாங்கள் எப்படி இன்னொரு வெளியில் கவிதைகள் குறித்து உரையாடலாம்? செல்வியை ஒருகவிதைக்காகக் கொலைசெய்து விட்டு அதன்பின் எப்படி நவீன கவிதைகள் குறித்தும் புதுக்கவிதைகள் குறித்தும் அரசியல் கவிதைகள் குறித்தும் பெண்கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் எழுதுவது குறித்தும் நாம் உரையாடுவது? என்ன அசிங்கம் பிடித்த வேலை?

இந்த வேலைதான் பிரேமிளின் வாழ்விலும் நடந்தேறியது. “I was killed by the tamils” என்று எழுதினார் பிரேமிள். உண்மையில் உயர்ந்த கலைஞர்களை அவமதித்து மனோதத்துவக் கொலை செய்வதிலும் பட்டினி போட்டுக் கொல்வதிலும் உயர்ந்த கலையை மூச்சடக்குவதிலும் மிகிமிகத் தீவிரம் காட்டுகிறவர்கள் அரை வேக்காட்டுக் கலைஞர்களும் இலக்கியவாதிகளும்தான் என்று எழுதினார் காலசுப்பிரமணியன். இந்த அரைவேக்காட்டாளர்களுடன் கைகோர்த்து பிரேமிளைக் கொன்றவர்கள் நமது முழுவேக்காட்டாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்.

பானு எழுதிய கவிதைகள் பேசுவதை விட பானுவிடம் இருந்து தொலைந்து போனகவிதைகள் பேசியவை முக்கியமானவை என்பதால், பிறத்தியாள் குறித்துப் பேசவர இவ்வளவு மனம் உறுத்த உறுத்த இந்த ஒப்பாரியை வைக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கில்லாத கதை சொல்லும் வாய்ப்பு பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. வராலற்றை செவி வழியாகவே சொல்லிவிடும் கடத்திவிடும் மனம் அவர்களுடையது. அகத்தை நேசிக்கும் மனம் மறுபுறத்தில் தன்னை அறியாமல் புறத்தை அதிகம் நேசிக்கிறது. நேசிப்பின் மீது படரும் மொழியூடாக வரலாற்றைக் தனக்குள்ளால் கடத்திவிடுகிறது. ஆனால் ஆண்களோ வரலாற்றுக்குள்ளால் தங்களைக் கடத்திவிடுவதிலே கவனம் செலுத்தவதால் உடலுடனும் அதன் மொழியுடனும் ஈர்க்கப்படாமலேயே அந்நியப்பட்டுவிடுகிறார்கள்.

ஈழப் போராட்டத்தில் இந்தியராணுவ வருகை என்பது மிக முக்கியமான காலகட்டம். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இருந்த விடுதலை இயக்கங்கள் எவ்வாறு மக்களை மேய்த்தன. மந்தைகளாக்கின என்பதை பலர் மறந்த போதும் தனது கவிதைகளில் குறிப்பிட மறக்காதவர் பானு. அப்போது பாடசாலை இளைஞர்களுக்கு மலவாசலுக்குள்ளால் Fanta போலத்தலை நுளைத்து வதை செய்யும் சித்திரவதை முகாமாக இருந்தது அசோகா ஹோட்டல் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.

அசோகா (ஹோட்டல்) ஆட்சியின் ஆதிக்கம்

கோடிப்புறத்து கிராமங்களின்

குச்சொழுங்கைக்குள்ளும் நீள்கிறது

இங்கு மரணத் தீர்ப்பெழுத

குறைந்த பட்ச

சமுசயங்களே காணுமாயுள்ளது.

என்று எழுதுகிறார் பானு.

எப்டி கந்தன் கருணையையும் துணுக்காயையும் விசுவமடுவையும் மறக்க முடியாதோ அதேபோல் நாம் மறக்க முடியாதது அசோகா ஹோட்டல். இந்த இந்திய இராணுவக் காலங்களில் ஈழத்துச் சூழலும் அதற்குள் வாழ்ந்த ஈழத்துப் பெண்களது நிலையையும் விமலுக்கு எழுதிய கடிதங்கள் பேசுகின்றன.

1.
“மரண பயத்திடமிருந்து

தலையை மறைப்பதை விட

ஒரு துண்டுக் கவிதையை மறைப்பதே

பெரும்பாடாய் இருக்கிறது.”

2.

“ஒரு கவிதையையோ

காகிதத்தையோ

அல்லதொரு சிறு குறிப்பையோ

பெண்ணின் மர்மப் பிரதேசங்களென(?)

சுட்டப்படும் இடங்களில் கூட

மறைத்து வைப்பதென்பது

தற்கொலைக்கச் சமனான செயல்

ஏனெனில்

எல்லாத் தரப்புச் சோதனைக்காரரும்

முதலில் கைவிட்டுத் தேடுவது

இந்த இடங்களாய்த்தான் இருக்கிறது.’

3.

‘தெரு நாய்கள் கூட

கடலை எண்ணையின் நாற்றம்

தூரத்தில் வரவே

வாலை மடக்கி

யோனியைப் பொத்திக் கொண்டோடப்

பழக்கப்பட்டு விட்டன.’

4.

‘ஓ பாரதமே

எல்லைகள் தாண்டி

வெண்கொடி நாட்டுவது இருக்கட்டும்

முதலில் உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும்

பிசைந்துருட்டி விளையாட திரண்ட உன் முலைகளை

அவர்களுக்குக் கொடு.’

பானு தனது சகோதரன் நக்கீரனுடன் நடாத்திய உரையாடல் இது.

நான் இயக்கத்திற்குப் போகப் போகிறேன். சேர்த்து விடுங்கோ.

சேர்ந்து…?

ஆயுதப்பயிற்சி எடுக்கப்போகிறேன் இந்தியாவுக்கு அனுப்பி விடுங்கோ.

எடுத்து…?

நாட்டுக்காகப் போரடப் பொகிறேன்.

ஹா…ஹ…ஹா…ஹா…

….

கைகளில் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு நீ கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உண்டு.
என்று நடந்த உரையாடலில், தான் கற்றுக் கொண்டவை அதிகம் எனக் கூறுகிறார்.

தனது சனங்களது வேதனை குறித்து அந்த வாழ்வின் தர்க்கம் குறித்து எழுதும் பானுவினது
போர்க்குணம் மிகப்பெரியது. பானுவுக்கு அந்தப் போர்க்குணத்தை ஒப்புவிக்க கவிதை வாய்த்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய பல பெண்கள் ஒதுங்கியிருப்பதைப் போல பானு ஒதுங்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். இன்னும் ஒவ்வொரு கணமும் கவிதை மொழியை கைக்குள் பொத்தித் தான் இருக்கிறார் பானு. தற்போது சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளில் தற்கால விமர்சனம் பரவிக்கிடக்கிறது. பானுவின் கவிதைகள் பெரும்பாலும் விமர்சனமாக அமைவது சமூகம் பற்றிய அதீத அக்கறையின் காரணமாகவே. கடைசிப்பக்கம் என்ற கவிதை ஒரு சமூகவிடுதலைப் போராளியின் கங்கணம் அது.

“….

நளத்தியென்றும்

பள்ளி பறைச்சியென்றும்

அழுகல் வாயால் சொல்லெறிந்து

அடித்து விரட்டியதும்

இந்தக்

கடைசிக் கலட்டி வெளிக்குள்தான்.

மீண்டும் மீண்டும் கூறியது கூற மறுத்து

அடம்பிடிக்கிறதென் கவிதை.

முஸ்டியை உயர்த்தி

கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது.

என்னவென்று?

உங்கள் பல்லுக் கில்லெல்லாம்

அடித்துடைக்கும் படி.

…”

இதுதான் பானு. இதுதான் பிறத்தியாள்.


நன்றி: கற்சுறா

Wednesday, June 01, 2011

இருக்கிறம்


அவதி முகாம்கள் 

-கவின்மலர் -

''ருக்கிறம்!'' ''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. 

ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது?

முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும்  வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு என்றைக்கும் நன்றிக்கடன்பட்டவர்கள்!’ என்று அவர்கள் நெகிழும்போது, குற்றவுணர்வு நம்மை ஆட் கொள்கிறது.

புழல் முகாமில் 'கோப்பி’ தந்து உபசரித்த ஒரு பெண் ''நான் படிச்சதெல்லாம் இங்கேதான். ஒன்பது வயசில் இங்கே வந்தேன். இப்போ நான் ஒரு கம்பெனி வேலைக்குப் போகுறன். இங்கேயே வளர்ந்ததால எனக்கு இங்க உள்ளவங்க மாதிரியே பாஷை மாறிடுச்சு!'' என்று சிரித்தார்.

மண்டபம் போன்ற சில முகாம்களில் இருக்கும் கான்கிரீட் வீடுகளும் 20 ஆண்டுகள் பழமையானவை. பல வீடுகளுக்கு ரப்பர் ஷீட்டுகள்தான் மேற்கூரை. சில இடங்களில் சொந்த செலவில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் வேய்ந்திருக்கிறார்கள். கோடைக் கால வெப்ப அனல் அப்படியே தலைக்குள் இறங்குகிறது.

தமிழகம் மொத்தம் உள்ள 115 முகாம்களில்  70,374 அகதிகள் வசிக்கிறார்கள். ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட அகதிகள், முகாம்களுக்கு வெளியே வசிக்கிறார்கள். தமிழக அரசு உதவித்தொகையாக குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 400, குடும்பத் தலைவிக்கு 200, பிள்ளைகளுக்குத் தலா 144 வழங்கு கிறது. அதாவது, குடும்பத் தலைவருக்கு வழங்கப்படும் அதிகபட்சத் தொகையின் ஒருநாள் சராசரி 13தான்.  இதில் ஒரு பால் பாக்கெட் மட்டுமே வாங்க முடியும். (கவனிக்க: தமிழகக் காவல்துறையின் மோப்ப நாய் ஒன்றுக்கு நாளன்றுக்கு ஒதுக்கப்படும் தொகை 60)

இந்த சொற்ப உதவித்தொகை ஆண்களைக்  கூலி வேலைகளுக்குத் துரத்துகிறது. பெரும்பாலும், பெயின்டர் வேலைக்கும்,கல் உடைப்பதற்கும், சுமை தூக்குவதற்குமே அவர்கள் செல்கிறார்கள். அதிலும் புழல், கும்மிடிப்பூண்டிபோல நகரங்களுக்கு அருகில் உள்ள முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்குத்தான் இந்த வாய்ப்பும் கிடைக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு அந்தக் கூலி வேலை கிடைப்பதிலும் சிக்கல்தான். பெண்களும் கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

அகதி முகாம் பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்னை கழிப்பறை வசதி! ஒரே வரிசையில் அமைந்திருக்கும் வீடுகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை என்பது நிச்சயம் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது! முகாம்களில் குடிநீர்க் குழாய்கள் இருந்தாலும், கோடைக் காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது! 

வெளியாட்கள் யாரும் அகதிகள் முகாமுக் குள் நுழைந்துவிட முடியாது. பத்திரிகைகளுக்கும் அனுமதி இல்லை. தப்பித்தவறி வெளி நபர் எவரேனும் முகாமுக்குள் நுழைந்து, அங்கு இருப்பவர்களுடன் பேச்சுக் கொடுத்துவிட்டால், போச்சு! அவர் சந்தித்த நபரை வளைத்துக்கட்டி க்யூ பிராஞ்ச் போலீஸார் கெடுபிடி விசாரணை மேற்கொள்வார்கள். அதற்குப் பயந்தே ஒருவரும் முகம்கொடுத்துப் பேசுவது இல்லை. ''சின்னப் பிரச்னையா இருந்தாலும், அகதி அடையாள அட்டையைப் பறிச்சு வெச்சுக்குவாங்க. அதைத் திரும்ப வாங்க ஆறு மாசமாகும். எதுக்கு வம்புன்னுதான் எதுலயும் தலையிட்டுக்குறது இல்லை. எங்களை நிம்மதியா விடுங்க!'' என்பதே பலரின் கருத்து. மீறிப் பேசுபவர்களும் தயக்கத்துடன் கேமராவுக்கு முகம் மறைத்தே பேசுகிறார்கள்!

''தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது உடல்நலம் இல்லை என்றாலோ, இறந்துவிட்டார்கள் என்றாலோ நாங்கள் உடனே சென்றுவிட முடியாது. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவே இரண்டு நாட்கள் ஆகின்றன. அதுவரை பிணத்தைப் போட்டுவைத்திருப்பார்களா? ஒரு நல்லது கெட்டதுக்குக்கூட எங்களால் போக முடிவது இல்லை!'' என்பது பலரின் துயரம். 

''அகதிகளாக இந்தியாவுக்கு வந்ததால் எங்களுக்குக் கிடைத்த முக்கியமான நன்மை பிள்ளைகளின் படிப்புதான். அரசுப் பள்ளிகளில் படிப்பதால் ப்ளஸ் டூ வரை பிள்ளைகளின் படிப்புக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், மேல்படிப்புக்குத்தான் சிரமம்!'' என்கிறார் முகாம்வாசி ஒருவர்.

ஒரு சில பெரிய முகாம்களில் உள்ளேயே பள்ளிக்கூடம் அமைந்துஇருக்கிறது. அங்கன்வாடிகளில் பல குழந்தைகளைக் காண முடிகிறது. ''ஈழத்தில் இழந்த கல்வியை இளந் தலைமுறைக்கு இங்கேயேனும்  புகட்ட வேண்டும் என்கிற தாகத்தில், படித்த முகாம்வாசிகளே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் ஒரு பட்டதாரி. எங்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன்!'' என்கிறார் ஈழ ஏதிலியர் கழகத்தின் பத்மநாபன். 



இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் குழந்தைகளும், சிறுவர்களும் விளையாட்டில் படு சுட்டியாக இருக் கிறார்கள். கிரிக்கெட், வாலிபால் போன்றவற்றை விரும்பி விளையாடுகிறார்கள். முகாம்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன.

போரின் முடிவு மனதளவில் அகதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அன்றாடம் அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இவர்களை மனதளவில் வெகுவாகப் பாதிக்கின்றன. அவர்களின் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அரசு ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியம். இப்படியானவர்கள், ஊனமுற்றோர், முதியவர்களை அகதி முகாம்களுக்குள் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதி எதுவும் இப்போதைக்கு இல்லை. இதற்காக 'தாய் மடி’ என்றொரு இல்லத்தை ஏற்படுத்தும் வேலைகள் நடக்கின்றன.

முகாம்களில் வாரத்தில் மூன்று நாட்கள் செக்கிங் உண்டு. அந்தச் சமயத்தில் யாரேனும் முகாமில் இல்லை என்றால், அவர்களது அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படுவதும் நடக்கிறது. அதனால், முகாம் வாசிகளால் வெளி வேலைகளில் முழுமையாக ஈடுபட முடிவது இல்லை.

இப்படியான பிரச்னைகளில் இருந்து இவர்களை நிரந்தரமாக விடுவிக்க, இந்தியாவில் நீண்டகாலம் வாழ்ந்து வரும் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமை கொடுக்கலாமா? 

''இந்தியாவில் குடியுரிமை பெற்று, இலங்கையின் குடியுரிமை பறிபோய்விட்டால், ஏற்கெனவே சிறுபான்மையினராக இருக்கும் நாங்கள், மக்கள்தொகையில் மிகவும் குறைந்துவிடுவோம். எங்களுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். எங்கள் உரிமைகள் அங்கே பாதிக்கப்படும். இரட்டைக் குடியுரிமை என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம்!'' என்கிறார் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தைச் சேர்ந்த நேரு.

இந்தியாவின் மனித உரிமை ஆர்வலர்கள் பலர், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

''இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக்கொள்வது அவரவர் மனம் சார்ந்த விஷயம். விரும்பியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்தால் நல்லதே. பங்களாதேஷ், பர்மா அகதிகள் பலரும் இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். இலங்கை அகதிகள் கொஞ்சம் பேர் ஒரிஸ்ஸாவிலும் அந்தமானிலும் இருக்கிறார்கள். இலங்கை அகதிகளுக்காக மட்டுமல்ல, ஒட்டு ªமாத்தமாக எல்லா நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கும் நன்மை தரும் வகையில் பரந்த அளவில் இந்திய அரசு சிந்தித்துச் செயல்பட வேண்டும்!'' என்கி றார் ஈழ ஏதிலியர் கழகத்தைச் சேர்ந்த பரமு.

தமிழக முதல்வர் 100 கோடி அகதி முகாம்களுக்கு என்று ஒதுக்கினார். தமிழக அரசின் இலவச கலர் டி.வி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களின் பலன்கள் முகாம் மக்களையும் சென்றடைகின்றன. ஆனால், இவை ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் 'சிறப்பு முகாம்’கள் என்ற பெயரில் அரசு சிறைக்குள் பல ஆண்டுகளாக அகதிகளைப் பிடித்துவைத்திருக்கிறது. இது அப்பட்ட மான மனித உரிமை மீறல். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 40 பேரைத் தடுத்துவைத்திருக்கிறது. ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி என காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வரும்போது, இவர்களை எங்கும் வெளியே செல்ல அனுமதிப்பது இல்லை. தேர்தல் பிரசாரம் தொடங்கி, முடிவுகள் அறிவிக்கும் வரையும் அவர்கள் வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடை, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை.

''அகதி மாணவர் ஒருவர் இங்கே மருத்துவமோ, சட்டமோ படிக்கலாம். ஆனால், அவர் டாக்டராகவோ, வக்கீலாகவோ தொழில் செய்ய முடியாது. இந்த விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாமே? அகதி முகாம்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த முன்வந்திருக்கிறது லயன்ஸ் கிளப். இதற்கு அரசின் அனுமதிக்காக ஓராண்டாகக் காத்திருக்கிறோம்!'' என்று வருத்தம் தெரிவிக்கிறார் நேரு.

''பிளாட்ஃபாரங்களில் வீடின்றி வாழும் மக்களை இங்கே நாங்கள் பார்க்கிறோம். நீங்கள் எங்களை அவர்களைவிடவும் மேலான நிலையில்தான் வைத்திருக்கிறீர்கள். அந்நிய நாட்டில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்திருக்கிறீர்கள். அந்த நன்றியை மறக்க மாட்டோம்!'' என்கிறார் ஈழ ஏதிலியர் கழகத்தைச் சேர்ந்த பரமு.

இத்தனை சிரமங்களோடு அகதி மக்களை நாம் வைத்திருந்தாலும், இப்படிச் சொல்வது அவர்களின் பெருந்தன்மை. ஆனால் நாம்?

'உணர்வினை யன்றி
உயிர்களு மீந்த
உடன் பிறப்புக்களை - உங்கள்
உயர் சிறப்புக்களை - எங்கள்
குறை நிரப்புக்களைக்
கனவிலும் மறவோம் -
மறந்தால் நாங்கள்
கதியெங்கே பெறுவோம்?
உங்கள் கரம் பிடித்தே எழுவோம்’

- என்று உணர்வு பொங்க இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை நோக்கிப் பாடும் அகதி மக்களின் பாடல் செவிகளுக்குள் இறங்குகிறது. இந்தப் பாடலின் முழுப் பொருளையும் விளங்கிக்கொண்டு 'கதியெங்கே பெறுவோம்’ என்று அலைபாயும் அகதி மக்களின் துயரை மத்திய - மாநில அரசுகள் துடைக்கும் நாள் எந்நாளோ?..

**********************************************************************************

அதிகாரிகளுக்கு மட்டும் ஆம்புலன்ஸ் சேவை!

தமிழகத்தில் 'அகதி’ என்று வருபவர் யாராக இருந்தாலும், மண்டபம் முகாமில்தான் அவர்கள் தங்களைப் பதிந்துகொள்ள வேண்டும். தற்போது இங்கு 2,479 பேர்  மழைக்கு ஒழுகும் வீடுகளில் குடி இருக்கிறார்கள். சிதைந்த சாலைகள், திறந்தவெளிக் குளிப்பிடங்கள், தூர்வாரப்படாத கிணற்றில் இருந்து குடிநீர் என மக்கள் வாழும் சூழலே இல்லை. இங்குள்ள 24 மணி நேர மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரம்கூட இருப்பது இல்லை. அகதிகளின் பயன்பாட்டுக்கு என தனியார் தொண்டு நிறுவனம் அளித்த ஆம்புலன்ஸ், அதிகாரிகளின் குடும்பத்துக்குச் சேவையாற்றி வருகிறது!

- இரா.மோகன்

''அஞ்சு வருஷமா சத்துணவே இல்லை!''

தமிழகத்தில் மிகப் பெரிய முகாமான கும்மிடிப்பூண்டி முகாமில் வசிக்கும் அகதி ஒருவர், ''இங்கே சுமார் 1,000 குடும்பங்களைச் சேர்ந்த 4,000 பேர் குடியிருக்கோம். ஆனா, எந்த அடிப்படை வசதியும் கிடையாது. பேருக்கு ஒரு ஸ்கூல் இருக்கு. எப்பவாவது டீச்சருங்க வருவாங்க. ஸ்கூல்ல கடந்த அஞ்சு வருஷமா சத்துணவுத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க. சமீபத்தில் எங்க முகாமில் சாலை, கால்வாய் வசதிகள் வேலை ஆரம்பிச்சாங்க. நடுவுல என்ன நினைச்சாங்களோ... பாதியில அப்படியே வேலைகளை விட்டுட்டாங்க!'' என்கிறார் விரக்தியுடன்!

- சுபாஷ்பாபு

'நல்லா படிக்கணும்னு ஆசை!''

வேலூர் அப்துல்லாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பிரியங்கா பிறந்தது தமிழ்நாட்டில்தான். தற்போது ப்ளஸ் டூ தேர்வு எழுதி இருக்கிறார். ''பத்தாவதில் 350 மதிப்பெண் எடுத்தேன். இப்போ குடும்பத்தில் சுகம் (வசதி) இல்லா காரணத்தால் அப்பா படிக்க வேணாம் என்று கதைத்துவிட்டார். நான் நல்லா படிக்கணும்னு ஆசை!'' என்ற பிரியங்காவின் கண்கள் முழுக்க கனவு! 

ஆச்சர்யமாக வேலூர் ஜாக்ஜி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிகிறார் ஸ்டெல்லா. ''பள்ளியில் நாங்கள் பேசும் தமிழ் மொழி புரியவில்லை என்று சக மாணவர்கள் கிண்டல் செய்தார்கள். இப்போது நான் ஈழத் தமிழில் செய்தி வாசிப்பதையும்கூட சிலர் கேலி  செய்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்தான் தமிழைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

நாங்கள் இங்கே பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். ஆனால், தங்கக் கூண்டு என்பதற்காக பறவைகள் தங்க நினைக்குமா? ஈழத்தில் எங்கள் உறவினர்களோடு பனை மரத்தடியில் உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிடும்  நாளுக்குத்தான் தினந் தினமும் ஏங்கித் தவிக்கிறோம்!'' எனும் ஸ்டெல்லாவின் குரலில் எப்போதும் ஒளிந்திருக்கிறது ஓர் இனம் புரிந்த சோகம்!

- கே.ஏ.சசிகுமார்

''அங்கேயே குண்டடிபட்டுச் செத்திருக்கலாம்!''

பவானிசாகர் முகாம்வாசி ஒருவரின் வேதனை இது... ''காலையில 10 மணிக்கு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் செக்கிங்குக்கு வர்றதா காக்க வைப்பாங்க. அவர் சாவகாசமா சாயங்காலமா வருவாரு. க்யூ பிராஞ்ச் போலீஸ்காரங்க செக்கிங் வர்றப்போ ஆள் இல்லைன்னா, வேலை பார்க்கிற இடத்துல இருந்து சர்டிஃபிகேட் வாங்கிட்டு வரச் சொல்வாங்க. தோட்டத்துக் கூலி வேலைக்குப் போறவன் தோட்ட முதலாளிகிட்டே சர்டிஃபிகேட் கேட்டா அவர் கொடுப்பாரா? அன்னியோட வேலையைவிட்டே நிறுத்திடுவாரு. ஹ்ம்ம்... இப்படி ஒவ்வொரு நாளும் துன்பம் துயரம் அனுபவிக்கிறதுக்குப் பதிலா, அங்கேயே குண்டடிபட்டுச் செத்து இருக்கலாம்!''

- எஸ்.ஷக்தி

ஒழுகும் வீடுகளுக்கு நடுவே வாலிபால்!

மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும் வீடுகள் சேலம் பவளத்தானூர் முகாமின் பளீர் அடையாளம். அரசு அளிக்கும் அரிசி உண்ணக்கூடிய தரத்தில் இல்லை என்பதால், கைக்காசைச் செலவழித்து, வேறு அரிசி வாங்க வேண்டிய நிலை. இங்கு உள்ள சிறுவர்களுக்கு விளையாட்டில் மிகவும் ஈடுபாடு உண்டு. வாலிபால்தான் இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு!

- கே.ராஜா திருவேங்கடம்

(நன்றி : ஆனந்த விகடன்)