Wednesday, June 26, 2013

டொமினிக் ஜீவா பிறந்த தின சந்திப்பு

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 87 வது பிறந்த தின சந்திப்பு

Wednesday, June 05, 2013

பிணங்களால் பிரச்சினை இல்லை மனுஷங்கதான் பிரச்சினை



சுடுகாட்டின் திசையிலேயே பெண்கள் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு காக்கும் சமூகம் நம்முடையது. சுடுகாட்டுக் காற்று அடித்தாலே ஆவி  அண்டியதாக அஞ்சும் மக்கள் மத்தியில்தான் கிருஷ்ணவேணி வாழ்கிறார். அனாதைப் பிணங்களை வண்டியில் சுமந்துவந்து அடக்கம் செய்வதோடு,  சந்நியாசித்தோப்பு சுடுகாட்டுக்கு வரும் ஊர்ப் பிணங்களை எரிக்கும் பணியையும் செய்கிறார்.


புதுவை பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து கிளம்புகிறது அந்த வண்டி. முன்னும் பின்னும் பிணவண்டியிலிருந்து சகிக்க இயலாத நாற்றம்  நாசியை உறுத்துகிறது. வியர்வை உருக உருக வலுகொடுத்து வண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை சபித்துக்கொண்டே நடக்கிறார்கள்  மக்கள். பிரதான சாலையைக் கடக்கும் வண்டி, சந்துகளில் நுழைந்து சந்நியாசித்தோப்பு சுடுகாட்டை வந்தடைகிறது. வண்டியை நிறுத்திவிட்டு,  படபடவென மண்வெட்டியை எடுத்து குழிவெட்டத் தொடங்குகிறார் கிருஷ்ணவேணி. குழி ஆழமானதும் வண்டியைச் சரிக்க, குழியில் விழுகிறது  வெண்துணி போர்த்திய சடலம். அருகே அமைதியாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னொரு பிணம்.



பிணம் புதைக்க குழி தோண்டித் தோண்டி கைகளில் இயல்புக்கு மீறிய சுருக்கங்கள். வாழ்க்கையின் இருட்டுப்புற ரகசியங்களை கண்டடைந்து விட்ட  ஞானியைப் போல அலட்சியம் தொனிக்கும் பார்வை... கிருஷ்ணவேணி சாதாரண மனுஷியில்லை. சாதனை மனுஷி.


‘‘இந்த ஊர்லதான் நான் பொறந்தேன். அப்பன் பேரு பிச்சமுத்து. முனிசிபாலிட்டில குப்பை வேலை செஞ்சார். அம்மை பேரு செங்கேணி. நாலு  புள்ளைகள்ல மூத்தவ நான். ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். மூத்த பிள்ளைங்கிறதால சிறு வயசுலயே கல்யாணம் கட்டிட்டாங்க. புருஷன் பேரு  அல்பர். மனுஷன் தங்கமானவரு. குடிப்பழக்கம் மட்டும் உண்டு. ஒருநாளும் என்னை அழ வச்சுப் பாத்ததில்லை.