Wednesday, January 11, 2017

கன்பொல்லை தவம் இரண்டாம் ஆண்டு நினைவுகள்

- கரவைதாசன்- 
இன்று கன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) அவர்களின் நினைவுகளை மீட்டு நிறுத்தும் இரண்டாம் ஆண்டு. அவரைப் பற்றி அவர் எனக்கு தந்தை எனச் சிலவும் சமத்துவத்துக்கான போராளியெனச் சிலவும் பொதுவுடமைக் கட்சியாளரெனச் சிலவுமென பலதும் பத்துமாக பல்வேறு நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தும் பிரிந்தும் வந்தேகின்றன. அண்மையில் இலக்கிய நண்பர் சிவராசா கருணாகரன் அவர்கள் ஆனையிறவு உப்பளம் பல மில்லியன் செலவில் இலங்கை அரசினால் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் உப்பளத்தினை தனியாருக்கு கையளிக்கப்போவதாகவும் இதனால் காலகாலமாக இவ்உப்பளத்தில் வேலை செய்து வந்த மாசியப்பிட்டி, தட்டுவன்கொட்டி, எழுதுமட்டுவாள், கரவெட்டி போன்ற கிராமத்து மக்களுக்கு திரும்பவும் வேலை கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை குறித்தும் விசனப்பட்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதனை படிக்க கிடைத்தபோது ஏனைய கிராமங்கள் ஆனையிறவுக்கு அயல் கிராமமாக இருக்கும்போது கரவெட்டியிலிருந்து வெகுதூரத்திலிருந்து வந்து அந்த மக்கள் வேலையில் சேர்ந்து கொண்ட வரலாற்றினை நான் பதிவுசெய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதும் என் நினைவுப் புலவுக்கு வந்து எட்டி நிற்கின்றன. அது வடபுலத்து நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்களின் நாகரிகமற்ற கரிய பகுதி. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக குற்றப்பரம்பரைச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வந்து கள்ளர்சாதியினர் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் ஒடுக்கியபோது அது போன்ற சட்டங்களை இங்குள்ள அதிகாரத்திலிருந்த ஆதிக்க சாதியினர் இங்கேயும் கொண்டு வர விரும்பினர். ஆனால் யாழ்ப்பாணராச்சியத்தில் அங்கம் வகித்த அந்திராசு போன்ற (கரையார) இடைச்சாதியினைச் சேர்ந்த முதலிகளினால் அவை முற்றுப்பெறாமல் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்து ஆதிக்க மையம் வடபுலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் ஒடுக்கி வந்தனர். யாழ்ப்பாணத்து தேசவழமைச் சட்டம் இதன் விரிந்த பகுதி என்பது இங்கு கண்கூடு. இலங்கையில் டொனமூர்திட்டத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது சேர்.பொன்.இராமநாதன்  போன்ற சாதிவெறி பிடித்த தலைமைகள் தமிழில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என எவ்வளவு ஊழிக்கூத்து ஆடினார்கள் என்பதும் எங்களது இருண்ட பக்கங்கள் தான்.


ஆனாலும் இதன் தொடர்ச்சியில் வந்த தேர்தல்களில் பொன்.கந்தையா போன்ற இடதுசாரித் தலைவர்களும் தேர்தல் களத்தில் நின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபசங்கத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம் இவர் கரவெட்டி கன்பொல்லை கிராமத்தினை சேர்ந்தவர் தோழர் கந்தையாவின் பிரச்சாரத்தில் தீவிர செயற்பாட்டாளர். அவரை ஒருநாள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கட்டிவைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். செய்தி அறிந்த வாலிபசங்கத்தினைச் சேர்ந்த தவம் அவரை மீட்க தன் சகோதரர்களுடன் செல்லவே அவர்களைத்தொடர்ந்து தவத்தின் உறவினர்கள் பெரும்படையாக சேர்ந்து சென்று சிவபாதத்தினை மீட்டு அவரின் உயிரினக் காத்துள்ளனர். இந்த நிகழ்வு கரவெட்டி ஆதிக்க சாதியினருக்கு பெரும் வெப்பியாரமாகிப்போய்விடவே எதிர்த்தடிக்க முடியா நிலையில் சதி வலையினை வேறு விதமாக வீசினர். தவத்தின் உறவினரில் சிலர் ஏற்கனவே வேறு வழக்குகளில் குற்றப்பட்டிருந்தனர். அதனைக் காரணமாக காட்டி அவருடைய பரம்பரையில் பலரை நீதிமன்றினூடாக நாடு கடத்துவதுபோல் ஊரைவிட்டு ஊர் கடத்தினார்கள் என்பது யாழ்ப்பாணத்து தமிழரின் வரலாற்றில் மிகவும் கறை படிந்த பக்கங்கள். தவத்தின் உறவினரை கோட் ஓடர் மூலம் ஆனையிறவு குறிஞ்சாதீவு உப்பளத்துக்கு குற்றத் தண்டனையாக அனுப்பி வைத்தார்கள். குண்டுமணி, மயிலன், மாசிலாமணி,சின்னக்கள்ளன், அராவர், சிங்கர் போன்ற ஆண்கள் மட்டுமன்றி மனோன்மணி, செல்லம், அரோகரம் போன்ற பெண்களும் வழக்கில் சாட்சியம் சொன்ன அவரின் தம்பி முறையான பதின்ம வயதுச் சிறுவன் சின்னத்தம்பி (நல்லதம்பி- மூவாயிரம்) கூட ஊரை விட்டு ஊர் கடத்தினார்கள். கிணறு கிண்ட பூதம் வந்ததுபோல் வைரம் பாய்ந்த தேகக்கட்டினை கொண்ட அவர்கள் அதனை சாதகமாகக் கொண்டு உப்பளத்தில் உழைத்து முன்னேறினார்கள். அண்டியிருந்த காடுகளை திருத்தி களனிகளாக்கி தமக்கு உரிமையாக்கி கொண்டனர். தொடர்ச்சியில் 1966ல் முழு கன்பொல்லை கிராமத்து மக்களும் வெகுசனமயப்பட்டு ஆயுதம் ஏந்தி சாதிய படிமுறைக்கு எதிராக போராடியபோது கரவெட்டி சாதி வெறி பிடித்த ஆதிக்க சாதியினரின் வாகனங்களை ஆனையிறவில் மறித்து பதிலுக்கு பதிலாக தாக்கினார்கள். தோழர் தவம் அவர்களின் இரண்டாம் ஆண்டினை நினைவுகூரும் இத் தருணத்தில் கன்பொல்லையின் வரலாறு சார்ந்து சில பக்கங்களினை பதிவிட்டுள்ளேன். இத்தருணத்தில் தவம் அவர்களின் இறுதிப் பயணத்தின்போது நேரில் வந்து தனது அஞ்சலியினை கணிக்கையாக்கிய சிவராசா கருணாகரன் அவர்களின் தோழமைமிக்க உணர்வினை மனத்திருத்தி கரவெட்டியினையும் ஆனையிறவினையும் இணையிறுத்தி பதிவிடத் தூண்டியமைக்கு நன்றி கருணாகரன். தோழர் கன்பொல்லை தவம் அவர்களுக்கு எனது புரட்சிகர அஞ்சலிகள்! இன்னும் வரும்... 

No comments: