Wednesday, November 26, 2014

எஸ்.பொ .இன்று( 26.11.2014)காலமானார்.

 "எஸ்.பொ .இன்று( 26.11.2014)காலமானார்". எஸ்.பொ. என்னும் ஆளுமை இனி எம்மிடமில்லை.ஈழத்தினிலே பிறந்து உலகெங்கினும் பயணித்து அவுஸ்திரேலிய சிட்னி நகரினிலே அவர் உயிர் அடங்கி விட்டது.எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (பிறப்பு: சூன் 4, 1932, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையில் ஆசிரியராகவும் நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுந்தார்.
ஈழத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கி அதற்கு சமாந்திரமாக ஈழத்து  தமிழ் இலக்கியச் செழுமைக்கு சத்தாக நின்றவர். 1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று மொழிபெயர்த்துள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

Saturday, November 01, 2014

மண் மூடிய துயர வரலாறு -1964 -2014 சாஸ்திரி ஸ்ரீமா ஒப்பந்தம்:50 ஆண்டுகள் நிறைவு.

-இரா.வினோத்-

இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை.

தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர்.

கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

நடைப்பயணத்தின்போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்' பத்திரிகை.