Sunday, April 24, 2016

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை

(இது புனைகதை அன்று உண்மை)
இக்கதை நிகழ்ந்த காலம் 2007
-சி மௌனகுரு -


சந்திரகுப்த தேனுவர இலங்கையின் நவீன பாணி ஓவியர்களுள் புகழ் பெற்ற ஒருவர். தனக்கென ஓவியத்தில் ஒரு பாணியைத் தோற்றுவித்ததுடன் தனக்கென ஒரு மாணவ பரம்பரையையும் கொண்டவர். சிங்கள மக்கள் மத்தியில் கௌரவத்துடன் கணிக்கப்படுவர். கொழும்பிலுள்ள கட்புல அவைக் காற்றுக் கலைப் பல்கலைக்கழகத்தில் (University of Visual and Performing Arts ) கட்புலக்கலைத் துறைத் தலைவர் நெருக்கமான என் நண்பர்களுள் ஒருவர்.விடுமுறையைக் கழிக்க அவர் தன் மனைவி குமுதினியையும் ஒன்பது வயது மகனான சாருதத்தனையும் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார். “ஆட்கடத்தல்கள், கொலைகள், அடக்குமுறைகள் மலிந்திருக்கும் இடம் என்றும் ஊடகங்களால் வர்ணிகக்கப்படும் மட்டக்களப்புக்கு இப்போது போகத்தான் வேண்டுமா” என்ற கொழும்புச் சிங்கள நண்பர்களின் பயமுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது ஒரு அதிகாலையில் மட்டக்களப்பு ரெயிலில் தன் மகனுடன் எம் வீட்டுக்கு வந்தார் குமுதினி. இரண்டு நாட்களும் மிக அருமையாகக் கழிந்தன. என் மனைவி சித்திரலேகாவும் நானும் அவர்களை மட்டக்களப்பின் இயற்கை வளம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றோம்.மட்டக்களப்பு வாவி (ஆறு) கடலோடு கலக்கும் கழிமுகமான முகத்துவாரம், அதனருகே நிறைந்து கிடந்த மிருதுவான வெண்மணல், எழுவான் கரைத் தீவும் அதன் கடல் அழகும், டச்சுபாரின் அழகிய கடற்கரை, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் மதாளித்து வளர்ந்து காற்றிலே அசைந்து நின்ற இளம் தென்னைகள் கண்ணாப் பத்தைகள்,

Thursday, April 07, 2016

அமரர் சி.சண்முகநாதன்!

-மா.சித்திவிநாயகம்-

மாவோயிஸ்டுகள் வர்க்கம் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை; தேசியம் குறித்தும் சிந்தித்தார்கள் என்பதற்கு தோழர் சி.சண்முகநாதன் மகத்தான உதாரணம்


நெடுந்தீவு தந்த தன்னேரில்லா முற்போக்குச் சிந்தையாளர் தோழர் சி. சண்முகநாதன் அவர்கள் இன்று கனடாவில் இயற்கையெய்தினார் என்கின்ற துயரச் செய்தியை துயரத்தோடு பதிவிடுகின்றேன்.தன் இளவயது முதல் சக மனிதர்களின் நலனுக்காய் குரல்கொடுத்து மக்களை மலினப்படுத்தும் அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிராகப் போராடி வந்த கம்யூனிசச் சிந்தாந்தவாதிகளுள் முதன்மையானவர் இவர்.சாதியத்தின் கொடூர அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த குடாநாட்டுத் தமிழர்களின் வாழ்வில் தீண்டாமை ஒழிப்பு,பெண்ணுரிமை போன்றவற்றின் முக்கியத்துவங்களைத் தொடர்ந்து பேசியவர் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர் அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர். அண்மையில்தான் அவர் கனடாவிற்குப் புலம் பெயர்ந்திருந்தார். மிகச் சிறந்த மானிட நேயனை இழந்த துயர் நெஞ்சத்தைத் தின்கின்றது .

ஒப்பாரி புலம்பல் ஓயாத அழுகை ஒலி என
எப்போதும் இழவே எம் தமிழர் விதி எனினும் 
பத்தோடு ஒன்றா இவர் பாதியிலே போவதற்கு 
வித்தல்லோ ஊரை உறவுகளை 
வேரை விழுதுகளை ஒன்றிணைக்கப் பாடுபட்ட 
சொத்தல்லோ 
வல்ல உழைப்பால் வளமார் தமிழினத்தை 
வாழவைக்கப் பாடுபட்ட நல்ல மனிதரை 



-நந்தினி சேவியர்-  அனுபவக்குறிப்பு

1971 இல் யாழ் / தொழில் நுட்பக்கல்லூரியில் நான் வணிகத்துறையில் ஒரு மாணவன். எனது சகமாணவன் நெடுந்தீவில் இருந்து வந்த சண்முகநாதன்.!.
இடதுசாரி சிந்தனயால் நாம் இருவரும் ஒன்று பட்டோம்.
அம் முறை தொழில் நுட்பக்கல்லூரி வணிக மாணவர் மன்ற தேர்தலில் தலைவர் செயலாளர், பொருளாளர் பதவிக்கான வாக்கெடுப்பு.. உடனடியாக ஆட்களின் பெயர் பிரேரித்து வழி மொழியப்பட்டு கைகள் உயர்த்தி வாக்கு எண்ணப்படும் தலைவர் பொருளார் பதவிகளுக்கு பெயர்கள் ஏகமனதாகத் தெரிவிக்கப் பட்டுவிட்டன.
நான் எதிர்பாராதவண்ணம் சண்முகநாதன்.!எனது பெயரை செயலர் பதவிக்கு முன் மொழிந்து விட்டான். “நயினை நாக.பஞ்சாட்சரம்” என்னும் தமிழ் அபிமானியை செயலாளராக்குவதாக உள்ளூர தீர்மானிக்கப் பட்டிருந்தது அதிலும் முதலாண்டு மாணவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்கின்ற எழுதாச்சட்டமும் இருந்து..
எனது பெயர் முன் மொழியப்பட்டு பத்து நிமிடங்கள் வழி மொழிய யாரும் முன் வரவில்லை. அப்போது நான் ஈழநாடு நாவல் போட்டியில் பரிசு பெற்று எனது வகுப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தேன். சடுதிஎன எனது வகுப்பு மாணவி ஒருவர் (ராஜிவி) எழுந்து என்னை வழி மொழிந்தார்....வாக்கெடுப்பு நடந்தது.
190 வாக்குகள் எனக்கும் 10 வாக்குகள் நயினை நாக.பஞ்சாட்சரம் அவர்களுக்கும் கிடைத்தது.(முழு பெண் வாக்குகளுமேஎனக்குத்தான் கிடைத்தது எனது அபிமானத்தினால் அல்ல ராஜீவிக்காக கிடைத்தது ) . முடிவை அறிவித்ததும்.....வணிகப் பகுதி பொறுப்பாளர் ஒரு வேண்டுகோளை என்னிடம் பகிரங்கமாக விடுத்தார்.
“முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த பதவிகளுக்கு போட்டியிடக்கூடாது
என்கிற எழுதா விதிக்கமைய “சேவியர்” இபோட்டியில் இருந்து விலகி மற்றைய போட்டியாளருக்கு இடம் வழங்குமாறு கேட்டுகொள்ளுகிறேன்..”
ஒலிவாங்கி என்னிடம் தரப்பட்டது. நான் பேசத்தொடங்கினேன்.....
அனைவருக்கும் வணக்கம் ! உண்மையில் இந்த பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இருக்கவில்லை. நயினை நாக.பஞ்சாட்சரம்..என்து நல்ல நண்பர். வணிகப் பகுதி பொறுப்பாளரின் கருத்து நியாயமானதுதான்......அனால் இந்தப் பதவிக்கு என்னை முன் மொழிந்த சண்முகநாதனையும், வழி மொழிந்த ராஜீவியையும்....எனக்கு வாக்களித்த 190 சகோதர சகோதரிகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்கிறேன்...நான் வாபஸ் பெறுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு தலைக் குனிவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை..எனவே இப்பதவியை நான் ஏற்றுக்கொண்டு செயல்ப் படுவேன் என்றேன்.
கைதட்டலால் மண்டபம் அதிர்ந்தது.
பின்நாட்களில் . வணிக மன்ற செயல் பாடுகளில் நான் பலவித நெருக்கடிகளை அனுபவித்தேன் சண்முகநாதன் எனக்கு உறுதுணையாக இருந்தான்.. இன்று அவனது மரணச் செய்தி எனக்குக பழைய நினைவை கிளறி விட்டது.
அவனும் நானும் இருவேறு அணிகளாக அரசியலில் இறங்கினோம்...மிக நீண்ட பிரிவு..... அவன் எங்கோ.....நான் எங்கோ....இன்று தான் அவன் கனடாவில் வாழ்ந்தான் இறந்தான் என அறிகிறேன்..
.கனடாவில் எனது “நந்தினி சேவியர் படைப்புகள்” நூலை அவன் வாங்கி இருக்கலாம்..வாசித்தும் இருக்கலாம் ...
அவனுக்கு எனது மௌன அஞ்சலி.! அவனது குடும்பத்தாருக்கு என்ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Monday, April 04, 2016

நினைவழியா நாட்கள் கே.எஸ். இரத்தினம் நினைவுக் குறிப்பு

-வண்ணைத்தெய்வம்-
கலைஞர்களுடன் கைகுலுக்கி
 நாளெல்லாம் நீ,நடந்த பாதையெல்லாம் 
 உன் மூச்சின்றி முகாரி பாடுதடா!!!
பூஞ்செடிகள், இன்னும், இன்னும் இத்தியாதி, இத்தியாதிகள். யாரையும் மறக்கமுடியவில்லை! 1983ம் ஆண்டு கார்த்திகை மாதம்;, நான் பிறந்து ஓடி விளையாடிய எனது தாய் மண்ணை விட்டு பிரிந்த அந்த நாள், 33 வருடங்கள் உருண்டோடி விட்டது! மறக்கமுடியவில்லை!.... என்னால் மறக்க முடியவில்லை!எனக்கு பிரியாவிடை தந்தனுப்பிய எனது நண்பர்கள் உறவினர்களுடன் நான் பிறந்த வீடு, நான் வாழ்ந்த வீடு, நான் வளர்த்த செல்லப்பிராணி வீமன் என்ற நாய்க்குட்டி, எவையையும் மறக்கமுடியவில்லை! 

இது கலைஞர்கள் வாழ்கின்ற பூங்காவனம். புகழ்பெற்ற பெரும் கலைஞர்கள் 'நவாலியூர் நா.செல்லத்துரை மாஸ்ற்ரர், 'கலைக்காவலர்" சி.தர்மலிங்கம் மாஸ்ற்ரர், குணநாயகம் மாஸ்ற்ரர். இந்த பெரும் கலைஞர்கள் வாழ்ந்த அந்த மண்தான் நண்பன் கே.எஸ்.இரத்தினத்தின் பிறப்பிடமும். இரத்தினம; நான் மறக்கமுடியாத அந்த நண்பர்களில் ஒருவர். ஏன் இவன் எனக்கு நண்பன் மட்டுமல்ல, எனது கலை வாழ்வின் குருவும்கூட! 1970ம் ஆண்டு என நினைக்கின்றேன் 'நல்வாழ்வு" என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக இயக்குனர் கே.எஸ். இரத்தினத்தினத்துடன் அறிமுகமாகி, இனிய நண்பர்களாகிய நாங்கள் இறுதிவரை நண்பர்களாகவே இருந்தோம். மறக்கமுடியாத அந்த நினைவழியா நாட்களை இன்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு மிக மிக அண்மையில் ஆத்திப்புலம் என்னும் சிற்றூர். ஆத்திசூடி வீதிக்கு முன்பாக புகையிரதத் தண்டவாளம். அதனைத் தாண்டினால் ஆத்திப்புல மக்களுக்கே பல்கலைக்கழகம்போல் விழங்கிய 'கலைமகள் சனசமூக நிலையம்" அதற்கு பின்னால் ஒரு அகண்ட பெரிய ஓலையால் வேயப்பட்ட வீடு. அதுதான் இரத்தினத்தின் இல்லம். இரத்தினத்தின் கலை வாழ்விற்கு வீட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் இருந்ததில்லை. இவருடைய இல்லத்தில்த் தான் நாடக ஒத்திகை பார்ப்போம். இதனால் தினமும் இரவு ஏழு மணியானால் நான் இவர்களின் வீட்டிற்கு தவறாது செண்றிடுவேன். முகம் தெரியாத வெளியாட்கள் வீட்டுக்கு வந்தாலும் ஒரு உற்ற சகோதரனைப்போல் கனம் பேணுவது இரத்தினத்தின் துணைவியார் போக்கு; நாடக ஒத்திகைக்கு வருபவர்களில் நான் ஒருவன்தான் வெளியாள். மற்றவர்களான கிங்ஸிலி செல்வக்குமார், சி.ரி.பி. ஜெயா அண்ணன், தேவன் நாகராசா போன்ற அனைவரும் அயலவர்கள்தான். ஓரிரு வாரங்களிலேயே நான் நன்கு அறிமுகமாகிவிட பின்பு அவர்களின் குடும்ப நண்பனாகிவிட்டேன்;.

இவரின் செல்ல மகள் சாந்தி. ஐந்து வயது இருக்கும். பார்ப்பதற்கு லக்ஸ்பிறே மாரின்னில் இருக்கும் குழந்தையின் படம்போல மொழு மொழுவென இருப்பார். நான் சென்றதும் என்னை வரவேற்கும் முதல் ஆள் இவர்தான். இரத்தினத்தின் தந்தையார் ஒரு கலா ரசிகன். நாங்கள் ஒத்திகை பார்க்கும் பொழுது அவரும் ஒரு இயக்குனராகவே மாறி நடிப்பின் நுணுக்கங்களைச்; சொல்லித்தருவார். இப்படியான நினைவழியாத அந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை.