Wednesday, October 29, 2014

எல்லோரும் ஏகலைவர் தாமோ

-கலாநிதி சி.ஜெயசங்கர்- 

நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 

ஏகலைவன் தொன்மோடிக் கூத்துப் பிரதிக்கு வழங்கிய முன்னுரை. 




னது சிறுபராயத்தில் ஏகலைவன் எனக்கு அறிமுகமாகின்றான். அந்த அறிமுகம் எனக்கு துயரத்தைத் தந்தது. அத்துடன் தர்மம், அதர்மம் பற்றிய வகுப்பறைக் கற்பித்தல்கள், கதாப்பிரசங்கிகளின் கதையாடல்கள், நியாயப் படுத்தல்கள் எல்லாவற்றிலும் சந்தேகம் இழையோடத் தொடங்கிவிட்டிருந்தது.


சத்திரியருக்குச் சேவகம் செய்யும் பார்ப்பனத் துரோணரிடம் வேடர் குலத்தவனான ஏகலைவன் ஏன் வந்தான்? கட்டை விரலை வெட்டிக் குருதட்சணையாகத் துரோணரிடம் கொடுத்த கதை ஏன் பாடப் புத்தகங்களுள் உள்ளடக்கப்பட்டது? குருபக்தியின் பெயரில் ஏகலைவன் ஏன் பெருமைப் படுத்தப்படுகிறான்? என்ற கேள்விகள் என்னுடன் வளரத்தொடங்கிற்று.

ஆயினும் ஏகலைவனின் குருபக்தி பற்றிய அதே கதைகள் எங்கும் எதிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே இந்தப் போக்கிரித்தனம் பற்றிய கேள்விகளும், பார்வைகளும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் கடவுளும் கலந்திருப்பதால் பக்தியும், பயமும், சேர்ந்து இக்கேள்விகளை மழுங்கடித்து வருவதாகவும் இருக்கின்றது. பொதுப்புத்திக்கும் பயபக்திக்குமான போராட்டத்தில் பயபத்தியின் ஆதிக்கம் எதிர்கொள்ளப்பட வேண்டியது.

Sunday, October 26, 2014

குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவோருக்கு எல்லாமே பூச்சண்டியாகத்தான் தெரியும்

-வன்னியசிங்கம் வினோதன் -

கூத்துமீளுருவாக்கம் என்பதன் பொருள் புலப்படாது அரைகுறையாகப் புரிந்துகொண்டு கூத்துமீளுருவாக்கத்தினைத் தவறானபார்வையில் பார்க்கின்றவர்களாக எம்மில் சிலர் உள்ளனர்.

“மீளுருவாக்கம்”எனும் சொற்பதத்திற்கு தமிழில் பலஅர்த்தங்கள் காணப்படுகின்றன. மறைந்துபோன கூத்துக்களை மீளக்கொண்டு வருவது தான் கூத்துமீளுருவாக்கம் என எண்ணிக் கொண்டிருக்கின்றவர்களும் உள்ளனர்.

உண்மையில் கூத்துமீளுருவாக்கம் என்பதுஅதுவல்ல. கூத்தின் அடிப்படை அம்சங்கள் மாறாது கருத்தியல் ரீதியானமாற்றங்களைச் செய்துகொள்வதாகும். கருத்தியல் ரீதியாகஎனும் போது தற்காலத்துக்கு முரணாக அமைகின்ற விடயங்களை மாற்றியமைப்பதாகும். உதாரணமாக சாதியச் சிந்தனைகள், பெண்ணியம், சிறுவர் வன்முறைகள் போன்ற விடயங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தற்கால சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓர் செயற்பாடே தவிர கூத்துக்கலையினைத் தவறானபாதைக்கு இட்டுச் செல்கின்ற செயற்பாடல்ல.

கூத்துமீளுருவாக்கம் என்பது சமகால பூகோளமயமாக்கல் எனும் ஆபத்துக்களிலிருந்து நமது சமூகங்களைப் பாதுகாக்கும் பொறிமுறைகளைக் கொண்ட ஒரு சமூதாய அரங்காக கூத்தினைஅடையாளங் காட்டி அதனை ஆய்வு அறிவியலூடாக முன்மொழிகின்றது.

கூத்துமீளுருவாக்கம் என்பது ஓர் ஆராய்ச்சி என்பதால் இதற்குகாத்திரமான சிந்தனைகள்,தேடல்கள், கூத்துக்கலைசார் அறிவு, அதுசார் செயற்பாட்டு அனுபவங்கள் என்பன இருத்தல் வேண்டும். இது எதுவுமே இல்லாது“குண்டுச் சட்டிக்குள் குதிரைஓட்டுகின்ற”சிலஅரைகுறைஅறிவுள்ளோருக்கு கூத்துமீளுருவாக்கம் என்பது பூச்சாண்டிகாட்டுவது போல்தான் இருக்கும்.

உண்மையிலே பூச்சாண்டிகாட்டுகின்ற செயற்பாடு எது வென்றால் 1960களில் கூத்தினைச் செம்மைப்படுத்துகின்றோம், மறைந்து சென்ற கூத்துக்களை மீளக் கொண்டு வருகின்றோம் எனப் பாரம்பரியமாகக் களரியில் ஆடப்பட்டு வந்த கூத்துக்களைச் சுருக்கி மேடையில் ஆடவிட்டு கூத்துக்கலையினைத் தம் ஜீவனாக நினைக்கின்ற சமூகத்தின் வயிற்றில் அடித்தார்களே, அதுவேபூச்சாண்டி காட்டுகின்ற செயற்பாடுகள்.

Tuesday, October 14, 2014

காவலூர் அவர்களுக்கு அஞ்சலி

ஈழத்தமிழினத்தின் முற்போக்கு இலக்கியத்தளத்தின் பங்காளியும் மூத்த எழுத்தாளரும் கலைஞருக்கு கலைஞருமாகிய காவலூர் ராஜதுரை அவர்கள் அவுஸ்திரேலியாவில் காலமகிவிட்டதான செய்திகிடைத்தது. காவலூர் அவர்கள் சிறுகதை, நாவல் ,கட்டுரை, திரைக்கதைவசனம்,விளம்பரம் வானொலி நிகழ்ச்சி என பல்வேறு உருவங்களில்  படைப்பினை உருவாக்கும் திறன்கொண்ட படைப்பாளியாக திகழ்ந்தவர். இவரின் தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கை தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முற்போக்கு  எழுத்தாளர் சங்கச் செயற்பாட்டளருக்கு எமது அஞ்சலி.

http://www.tamilauthors.com/01/296.html

Monday, October 06, 2014

மெட்ராஸ் - தலித் அரசியல் மீதான விமர்சனம்

-அ.ராமசாமி-
திருநெல்வேலி  ‘பாம்பே’யில் மெட்ராஸ். 

ஆயுத பூசையன்று இரண்டாம் ஆட்டம் பார்த்தேன். படம் பார்த்தவர்கள் பலரும்  ‘பார்க்க வேண்டிய படம்’ என்றே சொல்லியதை இந்த வாரம் முழுக்க என் செவிகள் கேட்டிருந்தன. ஒரு அரங்கில் ஓடுவதற்கே இப்போது வரும் படங்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் திருநெல்வேலி போன்ற இடைநகரங்களிலேயே இரண்டு அரங்குகளில் நிறைந்த காட்சிகளாக ஒருவாரத்தைத் தாண்டி விட்டது மெட்ராஸ். 

எதிர்மறை விமரிசனங்கள் அதிகம் எழுதப்பெறவில்லை. இயக்குநருக்கும், அவரோடு இணைந்து வேலை செய்த குழுவினருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்திருக்கின்றன. சிலர் பாராட்டுகளோடுகொண்டாடப்பட வேண்டிய சினிமா என்று கூடச் சொல்லியிருக்கிறார்கள்.  சினிமா போன்ற வெகுமக்கள் கலைக்கு வாய்- விளம்பரம்(Mouth-Ad ) மற்ற விளம்பரங்களைவிடக் கூடுதல் பலனளிக்கக் கூடிய ஒன்று. அதனால் தான் சினிமாவைப்பற்றிப் பேச வைக்க - பலரும் பலவிதமாகப் பேச வைக்க- முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.  படம் பார்த்த நானும் மெட்ராஸ் பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று எனச் சொல்வதோடு பேச வேண்டிய படமாக இருக்கிறது என்றும் சொல்கிறேன். பேச வேண்டும்என்பதைவிட விவாதிக்கவேண்டிய - விமரிசனம் செய்யவேண்டிய படம் என நினைக்கிறேன்.