Saturday, December 12, 2015

பழையகடுதாசி

-கரவைதாசன் -  
பேரூந்தின் பின்னே அலைந்து திரிதல் சருகுகளிற்கின்பம் எனின் காற்றிடையே பறந்து திரிந்து கம்பியிற் சிக்குண்டல் எனக்கின்பம். அதனிடையே என்பழைய செய்தி இன்னும் இருக்கிறது ஆதலால்.
-கரவைதாசன் -

இக்குறுகிய  கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது  என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு  வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி  ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது.  நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர்  தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும்  நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி  தானே இசையமைத்து  சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும்  கொண்டு சென்ற  பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் .  அப்போது இலங்கை சீனசார்பு  கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.  

கடையினிலே நெல்லியடிக் கடையினிலே 
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே, 
உடைத்தெறிந்தான் போத்தலை 
உள்ளமர்ந்தான்  கிளியனே 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே. 
சாதி வெறி தகரவே 
சஞ்சலங்கள் தீரவே 
சாட்சி வைத்தான்  சமூகம் தன்னிலே 
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா 
கிளியனும்  பகலவனாய்  ஒளி தருவானே. 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...

Sunday, December 06, 2015

அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்

இன்று தோழர் அம்பேத்கரின் நினைவு தினம்!
அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்:
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.