Sunday, July 05, 2015

பிரத்தியேகம் (சிறுகதை)

-கரவைதாசன்-
எனக்குத்  தெரியும் தூரத்தில் அவர்கள்  அந்த தொடு கடலை அண்டி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில்  அண்டளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ  சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அநாதரவற்றுக்  கிடக்கும்  கல்லொன்றினையோ அல்லது  பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார். இருப்பிலிருந்து  பிரிய விரும்பா ரீங்காரத்துடன்  அது நகர்ந்து செல்கின்றது. நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற் கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் கரும் முகில்களால் சூழ்ந்தே கிடக்கின்றது. இடையிடையே வெள்ளியிலான முகில்கூட்டங்களும். மொய்க்கின்ற குளிரும்,  வசந்த காலத்தினிலே இலையும் கணுவும்  பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் குடை விரித்துநின்ற மரங்கள் விறகாகி  உயிர் ஒளித்து மீண்டும் ஒரு பிராப்தத்துக்காய் வான் நோக்கி விரல் நீட்டி தவம் கேட்க  அவற்றிலும்  பனி குந்தியிருந்தன.  இவை  டென்மார்க் நாட்டின்  குளிர் காலத்தின்  இயற்கை வனப்புகள்.

எனக்கு இரசிக்க நேரமில்லை கைகோடரியினை ஓங்கி மரக்குத்திகளியிடையே  இறக்கினேன். எதிரே காற்று மெல்ல வந்து விலகிப் போனாபோது  குளிர் முகத்தில் அறைந்தது.  உள்ளே சென்று வழைமைபோல் அப்பா பாவிக்கின்ற அந்தக் கூடையை எடுத்து வந்து கொத்திப்பிரித்தெடுத்த விறகுகளை அதில் அடுக்கத்தொடங்கினேன். அப்பாவுக்குத் தெரிந்த  அதே நுட்பம் பெரிய துண்டுகள் கீழாகவும் சிறுதுண்டுகள் மேலாகவும்  அடுக்கி முடித்தேன். பலம் கொண்டவரை கூடையை இழுத்துச் சென்று கொட்டிலின் நடுவே விட்டேன். 
இரண்டொரு விறகுத்துண்டுகளை என்னோடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்கதவினைத் திறந்து சமையல் அறையினைக் கடந்து வராந்தவை நோக்கிச் சென்றேன். அங்கே அம்மா லீற்ஸ் கிழங்கினை பிரித்துச் சுத்தம் செய்துகொண்டு நின்றாள். நான் எடுத்துச்  சென்ற விறகுகளை போறணையில் இட்டேன். நெருப்பு சூழ்ந்து கொண்டு சுவாலைவிட்டு எரியத்தொடங்கியது சிறு கணங்களில் அவை தணலாய் பூக்கத்தொடங்கும். ஆனாலும் இப்போதே வராந்தாவை இதமான வெப்பம்   சூழ்ந்திருந்தது. அப்போதான்  கோட்டைக் கழட்டத் தோன்றியது.

யோகியின் நேர்காணல்


தினக்குரல் நாளேடு, இலங்கை
நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்

மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா? 

யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.

1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்

இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.   சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.