Saturday, July 26, 2014

மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கு உண்டு.

நெல்லை புத்தக விழாவில் கவிதை வாசிப்புக்கு அறிமுகமாக ஒரு சிறு கட்டுரைவாசிப்பு... 

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சீரும் சிறப்புமாக நடை பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்தக் கவிதை வாசிப்பரங்கத்தில் பங்குபெறும் வாய்ப்பினைத் தந்தமைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு என் வாழ்த்துகளும் அன்பும். குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் அவர்களுக்கும் அவருக்கு துணையாகச் செயல் படுகிற என் அருமைச் சகோதரர் தேவேந்திரபூபதி அவர்களுக்கும் என் மனம் கனிந்த அன்பும் நன்றியும்.
நண்பர்களே, ”நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும்போது நம்முடைய உலகமே மாறிப்போகிறது”- என்று ஒரு மேல்நாட்டுப் பொன் மொழி ஒன்று உண்டு’. “இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்”என்று ஷேக்ஸ்பியர் சொல்லுவார். இசை எப்படி ஒருவனை மென்மையாக்குகிறதோ அதே போல் நம்முடைய மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கும் உண்டு. ஒரு சம்பவம் சொல்வார்கள், வாழ்வில் விரக்தி மேலிட்டுத் தற்கொலை எண்ணம் மேலோங்கியிருந்த ஒரு பொழுதில் நண்பர் ஒருவர் தன் கையில் கிடைத்த நான்கு வரிக் கவிதை ஒன்றை வாசிக்கிறார்,

“இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்..”

Thursday, July 24, 2014

மதன் மோகன் மற்றும் நெளஷாத்- வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி

-ஷாஜி-

இசையை உள்வாங்கும் கலை என்பது இசையை உருவாக்கும் கலை போலவே மேலானது. நாம் இசையைப் பயிலுவதில்லை. அதை உணர்கிறோம்.
தன்னுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது லதா மங்கேஷ்கர் அவர்கள் அதுவரை பாடிய பாடல்களிலிருந்து மிகச்சிறந்த பத்து பாடல்களை தேர்வுசெய்து வெளியிட்டார். அதில் நௌஷாத்எஸ் டி பர்மன்அனில் பிஸ்வாஸ் ஆகியவர்களின் எந்தப்பாடலும் இடம் பெறவில்லை! ஆனால் அதில் சலில் சௌதுரிரோஷன், வசந்த் தேசாய் போன்றோர் இருந்தனர். அத்தொகுப்பில் இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்ட ஒரே இசையமைப்பாளர் மதன் மோகன்.

இந்தி திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் மதன் மோகனின் பெயரை எத்தனைபேர் சொல்லக்கூடும்வெகுஜன மத்தியில் மிக மிக அபூர்வமாகவே அவர் குறிப்பிடப்படுகிறார். ரோஷன் பெயர் இன்னும் அபூர்வம். சூப்பர் ஹீரோ ரிதிக் ரோஷனின் தாத்தா என்றால் சிலர் நினைவுகூரக்கூடும். அதேசமயம் நௌஷாத் போன்றவர்கள் அடைந்த புகழ் மிகமிக பெரிது. அவர் மறைந்தபோது எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அவரைப்பற்றிய பலமடங்கு பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம் முன்வைக்கப் பட்டதைத்தான் கண்டேன்.

திரை இசை என்பது மிகநுட்பமானது. அதே சமயம் மிகமிக பிரபலமானதும் வேகமாக மாறுவதும்கூட. ஆகவே தெளிவான திறனாய்வுகளோ கச்சிதமான மதிப்பீடுகளோ இங்கு உருவாவதில்லை. வெற்றியும் புகழும் பல்வேறு காரணங்களை ஒட்டி உருவாகி வருகின்றவை. அவ்வெற்றியின் பக்கவிளைவாக நாளிதழ்களில் மேலோட்டமாக எழுதிக்குவிக்கப்படும் கட்டுரைகள் மூலம் சில பிம்பங்கள் உருவாகி அவை விவாதிக்கப்படாமல் அப்படியே நினைவில் நிலைபெறுகின்றன. இதனால் மதிப்பீடுகளை விட பிரமைகள்தான் அதிகமும் நம்மிடம் வாழ்கின்றன.

Tuesday, July 22, 2014

பாபர் மசூதிச்சுவர்களில் பற்றிப் படர்ந்த விஷச்செடியின் வேர்கள்.

-சுகுணா திவாகர்- 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு  - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’. 

இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றை பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு, பின்பு என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். 1992 டிசம்பர் 6க்குப் பிறகு இந்தியாவின் முகம் நிறையவே மாறியிருக்கிறது. இந்திய மக்களின் மனநிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்வதற்கு பாபர் மசூதி இடிப்பும் அதனையொட்டி எழுந்த இந்துத்துவ எழுச்சியும் உதவியிருக்கிறது. இதன் எதிர்வினையாக இஸ்லாமிய இளைஞர்களில் சிலர் ஆயுதக்குழுக்களோடு இணைந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் எங்கெல்லாம் இந்துத்துவ இயக்கங்கள் வலுவாக இருக்கின்றனவோ அங்குதான் இத்தகைய பயங்கரவாதக் குழுக்களின் குண்டுவெடிப்புகள் அதிகளவில் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் இதற்குமாறாக முஸ்லீம்கள் அதிகமும் அரசியல்மயப்படுத்தப்படுவதும் நடைபெறுவது. குறிப்பாக, தமிழகத்தில் வெறுமனே மார்க்கவிஷயங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்திவந்த முஸ்லீம்களும் அவர்களது பத்திரிகைகளும் சாதி, தீண்டாமை, ஈழப்பிரச்னை போன்றவற்றிலும் கவனம் குவிப்பதும் ஒருசில புள்ளிகளில் பெரியாரிய இயக்கங்கள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகளோடு இணைந்து சில அரசியல் செயற்பாடுகளை நிகழ்த்துவதும் அதிகரித்துவருகிறது. ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் முஸ்லீம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதும் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பொய்வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கிற அவலமும் நடைபெறுகிறது. இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் மேலும் தங்களுக்குள் இறுக்கமடைவதும் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்கிற சூழலும் நிலவுகிறது. இப்படிப் பல்வேறுவிதமான சமூக மாற்றங்களுக்குக் காரணமான பாபர் மசூதி பிரச்னையின் வேர் தொடங்கிய நாள், அதே பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் மாதமொன்றில்தான். 1949, டிசம்பர் 22 அன்று முதன்முதலாக பாபர் மசூதியில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக ராமர் சிலை வைக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் பின்னுள்ள பின்னணிகள் குறித்து விரிவாக விவரிக்கும் நூல் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதிய ‘அயோத்தி : இருண்ட இரவு  - பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறு’. 

Wednesday, July 16, 2014

ஏகலைவன் தென் மோடிக் கூத்துப்பிரதிக்கான கட்டியம்

-கரவைதாசன்-

தமயந்தியின் ஏகலைவன் நாட்டுக்கூத்து 1995ம் ஆண்டு பிரதியாக்கம் செய்யப்பட்டபோது கூத்துப்பிரதிககள் பிரதியாக்கம் செய்யப்படுவதன் அவசியம் குறித்து என்னால் வழங்கப்பட்ட கட்டியம் இது. இக்கூத்துபிரதி மீண்டும் இந்த ஆண்டு(2014) பிரதியாக்கம் செய்யப்படும் செய்தி மகிழ்வினை தருகிறது.

தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆனால் 18ம் நூற்றாட்டின் கூற்றுகளிலேயே சங்கரதாஸ் சுவாமிகள் புராணக் கதைகளை நாடகப் பிரதியாக்கம் செய்தாரென்றும் 19ம் நூற்றாட்டின் கூற்றுகளில் அன்று நீதிபதியாக இருந்த காசி விஸ்வநாதன் அவர்கள் "தம்பாச்சாரி விலாசம்" "கையூடு தாசில்தார் விலாசம்" போன்ற நாடகங்களை பிரதியாக்கம் செய்தார் என்றும் காணக்கிடைக்கின்றன. இப்படியாக நாடகப் பிரதியாக்கத்திற்கு ஒரு வரலாற்றுப் போக்கிருக்கின்றது. இருப்பினும் நாடகப்பிரதிகள் தமிழில் மிகவும் ஒறுப்பாகவே இருக்கின்ற நிலையிலே, நாடகப் பிரதியினை அச்சாக்கம் செய்வதன் அவசியம் கருதி, தமயந்தியின் "ஏகலைவன்" தென் மோடிக் கூத்துப்  பிரதியினை அச்சாக்கம் செய்வதென்பது மிகவும் ஆரோக்கியமான செயல் நெறியே. 


நாடகப்பிரதிகள் நாடகப்பாடமொழி நாடக அரங்கமொழி என இருவகைப்பட்டிருக்கும் இதில் நாடக அரங்கமொழிப் பிரதிதான் அரங்காட்டத்தில் முதன்மை பெறுகிறது. தமயந்தியின் ஏகலைவன் தென்மோடிக் கூத்துப்  பிரதியினை வாசிப்பிற்குள்ளாக்கும்போதே இதன் தன்மையை புரிந்துகொள்வீர்கள். 

மகாபாரதத்திலே வரும் உப பாத்திரமான ’ஏகலைவன்’ பிரதான பாத்திரமாக உருவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட நாடகக் காரர்களால் ஆடப்பட்டும், மீள்வாசிப்பிற்கும் மீள்உருவாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் பிரளயனினால் உபகதை என்ற தலைப்பில் மேடையேறிய நாடகங்களில் முதல்க் கதை ஏகலைவனாக அமைந்திருந்தது. அதில் ஏகலைவன் தோற்கடிக்கப்பட்டு இறுதியில் காணிக்கையாக வலது கட்டை விரலை வழங்குவதாகவும் அந்தக் கட்டை விரலை அர்ச்சுணன் அம்பு விட்டு அடிப்பதாகவும் அமைந்திருந்தது. 

ஈழத்து நெல்லியடி அம்பலத்தாடிகள் மன்றைச் சேர்ந்த இளைய பத்மநாதனினால் உருவாக்கம் செய்யப்பட்ட ஏகலைவன் நாடகத்தில் துரோணரின் காலடியில் ஏகலைவன் தன் வலது கை கட்டை விரலை தானே கோடரியால் வெட்டி காணிக்கையாக வழங்குவதாகவும் அதனை அவனது தந்தையும் நண்பர்களும் பார்த்து ஆத்திரமடைவதாகவும் அமைந்துள்ளது.