Monday, June 10, 2019

யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்.

- எம். ஏ. சி. இக்பால்-
இந்தக் கட்டுரை 2002 -ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் 25 -வது ஆண்டு நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரையை வரைந்த எம். ஏ. சி. இக்பால் அவர்களுக்கு நன்றிகள். 2019ம் ஆண்டு ஜூன் 25
மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட அமரர் மு. கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும், சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே.
அன்னார் காலமாகி பல வருடங்கள் கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.
அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது அரசியல் பணி என்றால் அது மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் அமரர் கார்த்திகேசன் அவர்கள். பிரபுத்துவ கலை கலாச்சார ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் பல கொடூர கஷ்டங்களை எதிர்கொண்ட கார்த்திகேசன் அவர்கள், அதனை அவரது தோழர்களான காலஞ்சென்ற வைத்திலிங்கம் மாஸ்டர், அரியரட்ணம் மாஸ்டர், M.C. சுப்பிரமணியம், கே. டானியல், சுபைர் இளங்கீரன் போன்றவர்களின் உதவியுடன் துணிவுடன் எதிர்கொண்டு மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் முன்னின்று உழைத்தார்.
அதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கார்த்திகேசன் அவர்கள் 1955 -ம் ஆண்டு இடம் பெற்ற யாழ். மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சாதி, மத பேதங்களுக்கு எதிராக செயற்பட்ட கார்த்திகேசன் அவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் மக்கள் காலத்தால் அழியாத சரித்திர முக்கியத்துவமான ஞாபக முத்திரையொன்றை பதித்துள்ளார்கள். அஃதாவது யாழ்ப்பாணத்தில் மிகச் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியிலிருந்து 1955 -ம் ஆண்டு யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகிய சட்டத்தரணியான காலம் சென்ற மர்ஹூம் எம். எம். சுல்தான் அவர்களை யாழ். மாநகரசபையின் மேயராக (முதல்வர்) யாழ். மக்கள் தெரிவு செய்ததேயாகும்.
இஃது தமிழ் மக்களின் உயர்ந்த பண்பினை என்றும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த சரித்திர முக்கியத்துவமான விடயத்தை உருவாக்கியவர்களில் அமரர் மு. கார்த்திகேசன் மாஸ்டர் மிகவும் முக்கியமானவர். அவரும் 1955ம் ஆண்டு யாழ். மாநகரசபையின் உறுப்பினராகிய போது, கொட்டடி தெய்வேந்திரம் என்ற யாழ். மாநகரசபையின் உறுப்பினருடன் இணைந்து மர்ஹூம் எம். எம். சுல்தான் அவர்களை மேயராக்கி அகமகிழ்ந்த மாமனிதன்.
1990 -ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 -ம் திகதி யாழ். முஸ்லிம்களையும், இதரபகுதி முஸ்லிம்களையும் யாழ். மாவட்டத்தை விட்டு அவர்களின் சகல உடமைகளையும் பறித்துக் கொண்டு வெளியேற்றிய நிகழ்ச்சி இடம்பெற்ற போதும், தமிழ் மக்கள் மேல் யாழ். முஸ்லிம்களுக்கு எந்தவித வெறுப்புணர்வும் ஏற்படாது தடுத்துவிட்டவற்றில் மிக முக்கியமான விடயம் மர்ஹூம் எம். எம். சுல்தான் அவர்களை முதல்வராக்கியது என்றால் மிகையாகாது.
மாஸ்டர் அவர்களின் இச்செயற்பாட்டினால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் கார்த்திகேசன் அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் மாஸ்டரின் வீட்டிற்கு சென்று ஆங்கிலத்துடன் மார்க்ஸிஸக் கல்வியையும் கற்று வந்தார்கள். இதன் காரணமாக யாழ். முஸ்லிம்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும், ஒரு வாலிப சங்கக் கிளையும் உருவாக்கப்பட்டன. பெருந்தொகையான வாலிபர்கள் இக்கிளைகளில் இணைந்தார்கள்.
இச்சம்பவங்களின் பின்பு 1956 -ல் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத் தொகுதிக்கு போட்டியிட்ட மு. கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள் யாழ். முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அவர் செய்த சேவைகளை மனதில் நிறுத்தி யாழ். முஸ்லிம்கள் அவருக்கு தமது வாக்குகளை அளித்து தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அமரர் மு. கார்த்திகேசன் அதுபற்றி அடிக்கடி கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.
இவ்வாறு யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் கார்த்திகேசன் மாஸ்டருக்கும் இடையில் இருந்த உறவு அவரது மரணத்தின் பின்பும் நிலைத்திருந்தது. இன்றும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்தாலும் அமரர் மு. கார்த்திகேசன் மாஸ்டர் அவர்களுடனான தொடர்புகளை தினமும் நினைத்து அகமகிழ்ந்து வருகின்றோம்.
- எம். ஏ. சி. இக்பால்
தலைவர்
வடக்கு முஸ்லிம்களின் நலன்புரிச் சங்கம்

No comments: