Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9 - 10 - 11)

-விஜய பாஸ்கரன்-

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.

இரத்தினம் அந்த நாட்களில் பல ஊர் சண்டியர்களை எல்லைக்கோடு தாண்டவிடாமல் தடுத்தவர்.பலர் அந்த எல்லைகளை தாண்டவே பயந்தனர்.இவரைக, கண்டாலே ஓடி விடுவர்.எனவே பழிவாங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
கொலை வழக்கில் சத்தியேந்திரா உதவ வந்தபின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ச்சியாக வருகை தந்தனர்.சிலர் அவர்களுடன் உறவுகளை பலபல படுத்தினர்.எம்.பி.நவரத்தினம் விமர்சனத்துக்கு உள்ளாக தொடங்கினார்.இது நடராசா மாஸ்ரருக்கு பிடிக்கவில்லை.நேரடியாக இன்றி மற்றவரகளை தூண்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அப்போது எமது ஊரில் அரச உத்தியோகம் பார்ப்பவரகள் இல்லை.ஒரு சிலர் சிறுபான்மை தமிழர் மகாசபை மூலமாக ஆசிரியர்கள் ஆனவர்கள்.இதில் நடராசா கத்தோலிக்க மதம் மாறி அவர் மூலமாக தொண்டர் ஆசிரியராகி பின் மகாசபை மூலமாக நியமனம் பெற்றவர்.அவரின் இயற் பெயர் கந்தையா எனவும் கத்தோலிக்க மதம் மாறி பின் இந்துவாக மாறும்போது நடராசா என மாற்றினார்.கத்தோலிக்க மதம் மாறியபோதும் பெயரை அவர் பதிவு செய்யவில்லை.அவரது தம்பி இப்போதும் கணபதி வேதநாயகம் தங்கராசா.
அப்போது எமது ஊரில் உள்ள ஒரு இளைஞருக்கு கண்டக்டர் வேலை நியமனம் கிடைத்தது.எல்லோருக்கும் சந்தோசமாக சொல்லித் திரிந்தார்.பின்னர் அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டதாக வந்தது. போய் விசாரித்தால் எம்.பி. நவரத்தினத்தின் தலையீட்டால் நியமனம் ரத்து செய்யப்பட்டு நடராசா மாஸ்ரின் தம்பிக்கு தங்கராசாவுக்கு அவ் வேலை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நவரத்தினம் மீது எதிர்ப்பு தொடங்கியது.இவ் வழக்கில் சிக்கிய சின்னதம்பி செல்லத்துரை நடராசாவின் மைத்துனர்.நல்லையா ஆறுமுகம் நடராசாவின் மருமகன்.ஒரே வளவு இரண்டு வீடுகள்.இவரகளும் கம்யூனிஸ்ட் பக்கம் சாய்ந்தனர்.
நடராசாவின் பிரச்சினை தன் செல்வாக்கு தளராமல் தமிழரசுக்கட்சி விழாமல் காக்க வேண்டும்
18மாசி1968 அன்று இரத்தினம் கொல்லப்பட்டார்
இந்த தினத்தில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொலை வழக்கின் ஆரம்ப விசாரணைக்கு எல்லோரும் போக வேண்டும,.இந்த அன்று இரத்தினம் போகப் புறப்படும்போது எனது அம்மாவின் சிறிய தகப்பன் கனகச்சாமி என்பவர் தன் தங்கையுடன் காலையில் இரத்தினம் வீட்டுக்குச் சென்றார்.இவருக்கு கண் தெரியாது.இவருக்கு இரத்தினத்தின் சாதகபலன்கள் அறிந்தவர்.இரத்தினம் பொதுவாக பெரியவர்களிடத்தில் மரியாதையானவர்.
அவர் சொன்னார்.இன்று ஒருநாள் மட்டும் போகாதே.இந்த நாளைத் கடந்தால் உன்னை அறுபது வயதுவரை எவனும் வீழ்த்த முடியாது.அவரும் சிரித்துவிட்டு இது கட்டாயம் போகவேண்டும்.அவரது மனைவியும் வாக்குவாதப்பட அதை மீறி இரத்தினம் புறப்பட்டார்.இந்த வாக்குவாதங்களால் கைத்துப்பாக்கி மறந்துவிட்டார்.
இரத்தினத்துக்கு பரமன் என்ற நண்பர் கண்டிவீதி புத்தூர்சந்தியில் இருந்தார். அவரும் நளவர் சமூகம்தான்.இந்த வழக்குக்காக பலரும் சாவகச்சேரி சென்றனர்.
இக்கால கட்டங்களில் எமது ஊரவர்கள் போக்குவரத்துக்கள் எதிரிகள் இருப்பிடங்கள் வழியாகவே செல்வதால் மிகவும் எச்சரிக்கையுடன் சிறு சிறு குழுக்களாக முன் பின்னால் செல்வார்கள்.அடி கொடுத்தாலும்,அடி வாங்கினாலும் அதில் பங்கேற்க இன்றுவரை தயங்கியதில்லை.
இந்த வழக்கு முடிந்த பின்னர் எல்லோருமாக சாவகச்சேரி பருத்தித்துறை பஸ் மூலமாக 754 இலக்க பஸ்சில் ஏறி ரிக்கட்டுகளும் எடுத்துவிட்டனர்.இந்த பஸ் மட்டுவில்,கனகன்புளியடி ஊடாக எமது ஊருக்கூடாக செல்லும்.இரத்தினமும் இவர்களோடு ஏறிவிட்டார்.பஸ் புறப்பட தயாரானபோது எங்கிருந்தோ பனியன் ராசன் வந்தான்.பனியன் ராசன் இந்த பஸ் செல்லும்வழியிலேயே அவன் வீடு.ஆனால் அவன் இரத்தினத்தை இறங்குமாறு வற்புறுத்தவே அவரும் இறங்கிவிட்டார்.பெடியள் எல்லாம் இரத்தினத்தை வருமாறு கோர பனியன் ராசன் அவருக்காக நாங்கள் பரமனைப் பாரத்துவிட்டு வருகிறோம் என சொன்னான்.
இருவருமாக புத்தூர்சந்தி வந்து பரமன் வீட்டில் சைக்கிள் எடுத்துக்கொண்டு எமது ஊர் வரத்தொடங்கினர் .அந்த வீதியின் முதல் வளைவு அரை மைல் தூரத்தில் உள்ளது. அதில் இரண்டு புறம் இருந்தும் ஒழுங்கைகள் வருகின்றன.ஒரு புற ஒழுங்கையில் வீடுகள் உள்ளன்.மறுபுற ஒழுங்கையின் இரு புறமும் பனை வடலிகள் நிறைந்த காணி.
ஒருவர் தூரத்தில் நின்று பார்க்க கொலையாளிகள் கும்பலாக ஒழுங்கையின் உள்ளே கொஞ்சம் தொலைவாக நின்றனர்.அவரகளுக்கு இரத்தினத்தின் முன்னெச்சரிக்கை பார்வைகள் தெரியும்.பனியன் ராசன் ஓட இரத்தினம் பின்னிருந்து வந்தார்.அந்த வளைவை தாண்டி 50 யார் தூரம் சைக்கிள் செல்ல வெடி விழுந்தது.குறி தவறிவிட்டது.இரத்தினம் ஓடியிருந்தால் தப்பி இருக்க முடியும் அவர் ஓடவில்லை. வெடி விழுந்த இடம் நோக்கி பனியன் ராசனுடன் சைக்கிளை உருட்டி கவனமாக வர பனியன் ராசன் மெல்ல நழுவினான்.இரண்டு ஒழுங்கைகுள் இருந்தும் சுமார் 50 பேர்வரை வாள்,கத்தி கோடாலிகளுடன் சூழ்ந்து கொண்டனர்.
பனியன். ராசன் எதிரிகள் வந்த ஒழங்கைக்குள்ளால் ஓடினான்.எதிரிகள் அவனை எதுவும் செய்யவில்லை .இரத்தினம் சைக்கிளை வைத்தே நின்று போராடினார்.அவரது சைக்கிள் வீச்சில் ஒரு வாள் சிக்கி கீழே விழ அதை எடுக்க முயற்சிக்கும் போது ஒருவனின் கோடாலி அவர் கழுத்தில் விழ அவர் வீழ்ந்தார்.இச்சம்பவத்தில் இருவரை கொலையாளிகள் தூக்கிக் கொண்டோடியதாக சிலர் கூறினர்.இரத்தினம் கடுமையாக போராடியே இறந்ததாக பின்னாளில் நேரில் பார்த்த அயலவர் கூறினார்.
இரத்தினம் கொல்லப்பட்ட செய்தியை பனியன் ராசன் துரை என்ற சிறுவனிடம் சொல்லி ஊருக்குள் சொல்லும்படி அனுப்பினான்.அவன் எனது நாலாவது சகோதர்ர் ஒரொவரிடம் தகவல் கொடுக்க என் சகோதர்ர் வீட்டுக்கு வந்து தெருவில் சத்தமாக செய்தியை சொல்லி விட்டு அந்த இடத்துக்கு போய்விட்டார்.அவர் போகும் போது ஊர் எல்லையில் துப்பாக்கி ஒன்றுடன் பனியன் ராசன் நின்றான்.என் சகோதர்ர், அங்கு போனபோது அவர், பிணமாக கிடந்தார்.அது எதிரிகளின் சொந்த இடம் என் சகோதர்ர் வயது அப்போது 18.அந்த வழியால் பள்ளிக்கூடம் விட்டு புலிகளால் கொல்லப்பட்ட இராசதுரை வந்தார்.இருவரும் ஒன்றாக இரத்தினத்தின் உடல் அருகே நின்றனர்.இதன் பின் இரத்தினத்தின் சகோதரி,மனைவி என பெண்கள் செல்ல முன் எச்சரிக்கையுடன் ஆண்களும் சென்றனர்.
இதேநேரம் பஸ் வழியாக வந்தவர்கள் தகவல்தரவே பனியன் ராசனின் சதி என விளங்கிவிட்டது. பனியன் ராசன் தப்பி ஓடிவிட்டான்.
இரத்தினம் இறந்த தகவல் பரவ வி.என்.நவரத்தினம்மும் அங்கே வந்தார்.ஆனால் எதுவும் சொல்லாமல் உடனே கிளம்பிவிட்டார்.இந்த தகவல் எஸ.பி. சுந்தரலிங்கம் அவர்களுக்கு சாவகச்சேரி பொலிஸ் அறிவிக்க அவர் திருப்பி பதிலளித்தாராம் இவனால்தான் ஊர் அமைதி கெட்டது. நல்ல விசயம் என்றாராம்.இதை அப்படியே அங்கே விசாரணைக்கு வந்த சாஜன்ட் கூறினானாம்.
இரத்தினத்தின் மரண ஊர்வலம் பல ஊர்களில் இருந்தும் சிறுபான்மைத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.இந்த கொலை தொடர்பாக பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
எல்லோரையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் பொறுமையாக வைத்திருந்த இரத்தினம் கொல்லப்பட்டதால் எதிரிகள் துள்ளிக் குதித்தாலும் உரிமை பாராட்டவில்லை.


இரத்தினத்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை எமக்கு மட்டுமல்ல அன்று போராடிக்கொண்டிருந்த எல்லோருக்கும்,அவரை அறிந்தவர்களுக்கும் ஏற்படுத்தியது.எமது எதிரிகள் கொடிகாம்ம் அய்யாவுக்கும் எதிரிகள்.அவரும் கொஞ்சம் நிலை குலைந்தார்.
இதுவரை கட்டுப்பாட்டோடு இருந்த எமது ஊர் இளைஞர்கள் பயப்படவில்லை.மிக ஆவேசம் கொண்டனர்.உறவுக்கார்ர்கள் அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமாக செயற்பட அன்றிரவே குழுக்களாக எதிரிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தேடினர்.அவரகளின் திட்டம் அங்கே ஒரு பிணம் விழவேண்டும்.சந்தேகத்துக்கு உரிய தில்லைநாதன்,இராசரத்தினம்,சின்னக்குட்டி என பலர் வீடுகளில் இரவுத் தேடுதல் நடாத்தினர்.யாரும் அகப்படவில்லை.ஒரு மாதம் வரை தொடர்ந்தது.கொலையாளிகள் யாரும் வாய்திறக்கவில்லை.
இதில் முனைப்பாக நின்றவரகள் சின்னத்தம்பி செல்லத்துரை( நடராசாவின் மைத்துனர்) கட்டை செல்லத்துரை (நடராசாவின் தம்பி,) 
ஆறுமுகம்,சிறீ ஜெயச்சந்திரன் ஆகியோர்.இதனிடையே இரத்தினத்தின் மைத்துனர்களான மாணிக்கம் ராசன்,மாணிக்கம் சின்னதம்பி ஆகியோர் குடும்ப பொறுப்புகள் காரணமாக ஒதுங்க வேண்டியதாயிற்று.சின்னதம்பி செல்லத்துரையும் குடும்பகார்ர்தான்.ஆனால் அவர் தீவிரமாக பழிவாங்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்.ஜெயச்சந்திரன் மிக இளைஞர். அவரின் நேரத்துக்கு உரிய தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டபோதும் தங்கையோடு அலைந்தபோதும் தன் பங்களிப்பை குறைக்க வில்லை.

இவர்களோடு ஊர் இளைஞர்கள் அனைவரும் துணிவாக கைகோர்த்தனர்.இரத்தினம் இருந்தபோது உறங்கியவரகளால் இப்போது உறங்க முடியவில்லை.எமது ஊரவரகளுக்கே தெரியாது எவனெவன் எங்கே போகிறான் என்று.
இதனிடையே வரணி குடமியன் பகுதியில் இருவர் இரத்தினம் கொலையில் சம்பந்தப்பட்டதாக பெருமையடித்த கதை உலாவந்தது.எமது ஊரவர்கள் திட்டம் கொலையாளிகளை அவர்கள். வீட்டில் வைத்தே கொல்வது. ஆனால் எவரும் அப்படி அகப்படவில்லை.குடமியன் பகுதியை சேரந்தவரகள் சில நாட்களில் கொல்லப்பட்டனர் .மிக இரகசிமான முறையில் கொல்லப்பட சந்தேகத்துக்கு உரியவர்கள் தலை மறைவாகி விட்டனர்.இரத்தினத்துக்கு ஒரு பெயர் காட்டுவாடி.அவரகள் சொன்னாரகளாம் நாங்கள் நினைத்து ஒரு காட்டுவாடி ஆனால் அங்கே நூறு காட்டுவாடிகள் இருக்கிறார்கள்.
இதேவேளை பனியன் ராசன் எந்த அச்சமும் இன்றி அனுராதபுரம் யாழ்ப்பாணம் பஸ் ஓடிக்கொண்டிருந்தான்.அவனில் ஆத்திரம் இருந்தபோதும் வஞ்சம் தீர்க்க வெளிக்கிட்டால் ஊர் இரண்டுபடலாம்.அவனும் தன் இருப்பிடத்தை அனுராதபுரத்துக்கு மாற்றிவிட்டான்.பின்னாட்களில் அவன் பணம் வாங்கியதை பலர் உறுதி செய்தனர்.
இதனிடையே எமது ஊர் வாசிகசாலையை தியாகி இரத்தினம் சனசமூக நிலையம் என நடராசா பெயரை மாற்றினார்.அதில் தன் மைத்துனர் பனியன் ராசனை பாதுகாக்கும் உள்நோக்கம் இருந்தது.இரத்தினத்தின் மரண சடங்கில் கொடிகாம்ம் அய்யாவும்,தம்பி தபால் சாமியும் கலந்து கொண்டனர்.அப்போது நடராசா உங்கடை ஆட்கள் செய்த வேலையைப் பாருங்கள் என ஆட்களின்முன்னே அய்யாவை நோக்கி கேட்டாராம். அப்போது அவர் தம்பி சாமி உன் மச்சான்தானே காட்டிக்கொடுத்தவன் என கூற நடராசா சத்தமின்றி விலகிவிட்டார்.
சின்னத்தம்பி செல்லத்துரை,செல்லத்தம்பி சிறி ஜெயச்சந்திரன் ,நல்லையா ஆறுமுகம் ஆகியோர் சங்கானை பிரேத ஊர்வலத்தில். நமது ஊர் சார்பாக கலந்து கொண்டவர்கள்.அந்த துப்பாக்கி வேட்டுக்கள் மத்தியிலும் சங்கானை தோழர்களுடன் களம் நின்றவர்கள்.

No comments: