Sunday, April 19, 2015

இஸ்தம்பூல் பயணக்குறிப்பு


-ந.சுசீந்திரன்-
கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் கொன்ஸ்ராண்டின் என்ற ரோமச் சக்கரவர்த்தி இன்றைய இஸ்தம்பூல் என்ற இந் நகரத்தைப் புனரமைத்து அதற்குப் ”புதிய ரோமாபுரி” என்று பெயரும் வைத்து அதனை ரோம சாம்ராச்சியத்தின் கிழக்குப் பகுதியின் தலை நகராகவும் ஆக்கியுள்ளான். அவனது மரணத்தின் பின்னர் அது ’கொன்ஸ்டாண்டினோபிள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவே இன்றைய இஸ்தம்பூல் ஆகும்.
இஸ்தம்பூல் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகை ஜுஸ்டினியான் என்ற ரோமச் சக்கரவர்த்த்தி காலத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் ஏழாயிரம் அடிமைகளை வேலையாட்களாக வைத்துக் கட்டப்பட்டிருகின்றது. இவ்வாறான ரோமர் காலத்தில் அமைக்கப்பட்ட நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகைகள் அதிக அளவில் இத்தாலியிலும், மற்றும் தூனேசியாவிலும் காணப்படுகின்றன. இந்த ரோமர் காலத்து நீர்த்தேக்கங்களுக்கு சுமார் 100 கிலோமீட்டர் வரையான தூரத்தில் இருந்து கூட நிலக்கீழ் வடிகாலமைப்பின் மூலம் தண்ணீர் பெறப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. ஆனால் சுமார் 80,000 கனமீட்டர் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய, பன்னிரு வரிசைகளில் ஒவ்வொரு வரிசையும் 8 மீட்டர் உயர 28 தூண்களைக் கொண்ட பிரமாண்டமான, 138 மீட்டர் நீளமும் 65 மீட்டர் அகலமுங் கொண்ட உலகின் பெரிய நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகை இங்கே இஸ்தம்பூலில் உள்ள ”பாசிலிக்கா சிஸ்டேன்” என்ற இந்த நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகையாகும்.

அழகும் நேர்த்தியும் மிக்க ஆயிரங்கால் மண்டபம் போலக்காட்சி தருகின்றது இந்த மாளிகை. அருகில் இருக்கும் ’டொப் காபி’ என்ற பிரமாண்டமான அரண்மனைக்கும் இதுவே நீர் வழங்கும் சுனையாக இருந்திருகின்றது. இப்போது சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் நீர் காணப்படுகின்றது. அனேக பெரிய மீன்கள் நீரைச் சுத்தமாக வைத்திருக்க வளர்க்கப்படுகின்றன. பழைய காலங்களில் நாடுகளுக்கிடையில் போர் மூண்டால், எதிரியின் நீர் நிலைகளைக் கைப்பற்றுவது, நச்சூட்டுவது, விநியோகத்தைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறனதொரு போர்க் காலத்தில் தண்ணீரைப் பெறுவது தடைப்பட்டாலும் சுமார் ஒரிரு வருடங்கள் அரச குடும்பமும் மற்றும் குடிமக்களும் உயிர் வாழக்கூடிய போதியளவு தண்ணீரை இந்த மாளிகை வழங்க முடியுமாம்.

No comments: