Sunday, January 01, 2006

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்...


என்.சரவணன்

90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் 1992 தொடக்கம் 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை தமிழிலும் சிங்களத்திலும் செய்து வந்த இவர் நடைமுறைச் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் நோர்வேயிலிருந்து வெளிவந்த பறை என்கின்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இவரது ஒரு சில நூல்களில், பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும் என்கிற நூல், இலங்கையின் பெண்களின் அரசியல் வரலாறு குறித்து தமிழில் பேசப்படுகின்ற ஒரே வரிவான நூலாக உள்ளது. இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.



புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?

தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படை உரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியும் மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திரும்பி வருவார்களா என்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்பட வேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம் பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.


இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்?


ஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடிய¬தாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. தம்மை இலங்கையர் என்றும் கூறமுடியாத, தாம் நோர்வேயில் பிறந்திருந்தால் தம்மை நோர்வேஜியர்கள் என்றும் கூற முடியாத, Nortamils, Dantamils னுயவெயஅடைள என தம்மை அடையாளப்படுத்துகிற நிலை வளர்ந்து வருகிறது. முழுமையாக அவர்கள் நோர்வேஜியர்களாகவும், டனிஷர்களாகவும் அடையாளப்படுத்துவதற்கு இன்னும் சில சந்ததிகள் கடக்கவேண்டியிருக்கும்.

அவர்களின் பெற்றோரின் தாயகத்தை அறியாத, அது குறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். உலக புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்¬களும் முன்மொழியப்படுகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழில் புலத்து இலக்கியத்தின் ஆயுள் கேள்விக்குரியது.

புகலிடத்தில் அரசியல் செயற்பாடுகள் பற்றி..?

புகலிடத்தில் தமிழர்களின் அரசியல் செயற்பாடு இன்னமும் தமிழ்தேசிய அரசியலுக்கு அப்பால் எட்டவில்லை. விதிவிலக்காக அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு அரசியலுடன் இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது பொய்யில்லை. ஆனால் அது மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலைத் தாண்டி செல்லவில்லை என்பதே யதார்த்தம். இனி இதுவே தமது நாடாக ஆகிவிட்ட நிலையில் இந்த நாட்டவர்களுடனும், நாட்டு நலன்களுடனும், அதன் அரசியலுடனும், இணைவாக்கம் செய்துகொள்வது அவசியமானது. வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக இந்த நாட்டவர்கள் கொண்டுள்ள பொதுவான குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர்களின் சமூக இணைவாக்க பிரக்ஞையின் போதாமை பற்றியது.

அடுத்தது மாற்று அரசியல் கருத்துடையவர்கள் திட்டமிட்ட ரீதியில் நலமடிக்கப்பட்டமை பற்றியது. இன்று மாற்று அரசியல் கருத்துடையவர்கள், அல்லது விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றாதவர்கள், அவர்களுக்கு நிதி வழங்காதவர்கள் அவர்கள் தமிழ்த்தேச ஆதரவாளர்களாக இருந்தாலும்சரி அனைவருமே எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மிக எளிமையாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இவர்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டும், அந்நியப்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் எதிரியின் முகாமுக்கே தள்ளப்பட்டுவருவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

இன்று புகலிடத்தில் மாற்று அரசியல் செயற்பாடுகள் நிறுவனமயமாக இல்லை.
யுத்தநிறுத்த ஒப்பந்தம், பின் "ஏகப்பிரதிநிதித்துவ" அரசியல், அதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என அனைத்துமே தமிழ்த்தேசியத்தின் பெயரால் உண்மைகள் இருட்டடிப்பு செய்வது சர்வசாதாரண ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் சிறிது ஒதுங்கிநின்று கிடைத்த சந்தர்ப்பத்தில் உண்மைபேசினால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோமோ, தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி அதில் சரணடைந்தோர் பலர், சமரசம் செய்து கொண்டோர் பலர். தம்மை ஊமைகளாக ஆக்கிக்கொண்டோர் பலர். பலரதும் அரசியல் முகமூடிகள் கிழிந்தன. எப்போதும் பலமானவர்கள் பக்கம் இருப்பது லாபம் என்றுணர்ந்து தமது நேர்மை அரசியலை துறந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான விடுதலையை இது பெற்றுத்தரப் போவதில்லை. பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும், ஜனநாயக குரல்களுமே கடந்த காலங்¬களில் தேச விடுதலைப் போராட்டத்தில் பாசிசப் போக்கை கணிசமான அளவு மட்டுப்படுத்தியது. இனி வரும் அத்தனை ஜனநாயக விரோதப்போக்குகளுக்கு வழங்கும் ஆசீர்வாதமும், அங்கீகாரமுமே இந்த "ஏகபிரதிநிதி" சித்தாந்தம். ஆரம்பத்திலேயே இதனை நாங்கள் எச்சரித்திருந்தோம். அனைத்து ஜனநாயக விரோத போக்குகளும் தேசியத்தின் பேரால் விதிவிலக்கு கோரும் நிலை மாற்றப்படவேண்டும். இந்த நிலை தளத்தில் மட்டுமல்ல புலத்திலும் தான்.

பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறுந்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக் கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.
இதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..?

தேசியவாதத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது இனத்தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன் தான் தன்னை அடையாளப்படுத்தியதுஅதற்கூடாகவே தன்னளவில் அது வளர்த்துக்கொண்டது. இன்று சிறிலங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்த¬மும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத் துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுருவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக் கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு தமது வலைக்குள் சிக்க வைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத் தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலை வாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகாக்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக் கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்தி வருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

ஜாதிக ஹெல உறுமய என்பது இந்த பாசிச அமைப்புகளின் ஒரு முன்னணி அமைப்பாக இயங்குகிற ஒரு கட்சி மட்டும் தான்.

ஜே.வி.பி. இன்று சிஹல உறுமயவின் நிகழ்ச்சி நிரலை கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் ஜே.வி.பியின் மூலோபாயம் அதுவல்ல. அது அரசியல் சந்தர்ப்பவாத தந்திரோபாயம் மட்டும்தான். ஆனால் இதற்கான சித்தாந்த பலத்தை தயாரித்தளிப்பதும், அதனை விரவவிடுவதும் அதற்குப் பின்னாலுள்ள பலமான சிங்களப் பேரினவாத அணிகள் தான்.
வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா?

முன்னரெல்லாம் பல பெயர்களைக் கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அனைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்பு வடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறி வந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன. தென்னிலங்கையில் பிரதான அரசியல் அமுக்கக் குழுவாக இந்த சக்திகள் இன்று ஆகிவிட்டிருக்கின்றன.
இப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா?

உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான ஹெருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியான வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்கு வால்பிடித்துக் கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லோருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது. அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தன. அந்த பட்டியல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்கத்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டி¬ருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று "அடபிரி" செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப் புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயுதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாக்காசாக்கியது யாரது வெற்றி, ரணிலின் ஆட்சி கவிழ்ப்பு, சந்திரிகாவுக்கு எதிரான சதி, மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியமர்த்தல், ஆட்சியை நிழலில் இருந்து வழிநடத்துதல் என சகல வெற்றிகளையும் அது தொடர்ந்துகொண்டே இருக்கி¬றது. இந்த நிலைமைகளை விளங்கிக்¬கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.
ஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..?

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பின்னால் முதலாளித்¬துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக் கொள்கிறது. சிஹல உறுமய இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடையை பாசிசம் தனக்குரிதாக்கி விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லை, என்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது. பேரினவாதம் நிறுவனமயப்படுதல் என்பது எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமல் இலங்கையில் நிகழ்கிறது.
இனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..?

பாராளுமன்ற அரசியல் வாதத்தைப்பொருத்தவரை பேரினவாதத்தை திருப்திபடுத்துகின்ற சக்திகளே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றமுடியும், அதனை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டுமென்றால் ஒரு அதிசயம் தான் நிகழவேண்டும்.

பேரினவாத முலாம் பூசப்பட்ட பௌத்த மதமும், அதில் நிலையூன்றச்செயய்ப்பட்டுள்ள அரச அதிகார கட்டமைப்பு மேலும் கல்வி, மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைத்¬தும் பேரினவாதமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புறநிலையாக இவற்றுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் சில ஜனநாயக நிறுவனங்களுமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் அது அவ்வளவு பெரிய வெற்றியை எய்த முடியவில்லை.

மேலும் முற்போக்கான புத்திஜீவித்துவ சக்திகள், புலமையாளர்கள் என்போர் பல சமயங்களில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று நம்பி பூர்ஷ்வா சக்திகளை சார்ந்தும் அச்சக்திகளை பலப்படுத்தியும் வந்துள்ளனர். இந்தத்தவறை காலப்போக்கில் சிலர் திருத்திக்கொண்ட போதும் கணிசமானோர் அதனை திருத்திக்கொள்வதை தமது மானப் பிரச்சினையாகக் கொண்டதும் உண்டு. இதன் விளைவு அவர்கள் எதிரியின் கைக் கூலிகளாகவும், பகடைக்காய்களாகவும், ஆகி ஈற்றில் அவர்களின் உரிய இடத்தை முழுவதும் இழந்ததும் நமது நாட்டில் நடந்தது. பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சி காலங்களில் பூர்ஷ்வா வர்க்கம் முற்போக்கனாதாக காட்டிக்கொண்டதும், அது அறிவாளிகளையும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற உபயோகித்ததையும், அது அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் தொடர்ந்தது போல இங்கும் நிகழ்ந்தது. 1956இல், 1970இல் 1994இல் இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன.

ஆனால் 2005இல் பேரினவாத சக்திகள் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற போதிய பலமுள்ளதாக இருநதது. மார்க்சிய தோல் போர்த்திய பேரினவாதிகள் இலகுவாக அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதில் ஊடகங்களின் பாத்திரம் பற்றி...?

இன்றைய யதார்த்த நிலையொன்று உள்ளது. அது தான். ஊடகச் சந்தையில், ஊடக முதலாளிகளின் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால், அந்த மூலதனம் லாபத்தை ஈட்டவேண்டுமென்றால் தேசியத்தை உயர்த்திப்பிடித்தல் என்பது தவிர்க்கமுடியாததாகிறது. இது ஒரு சந்தைக்கான தந்திரோபாயமாக (Marketing stretegy) ஆகிவிட்டிருக்கிறது. சிங்களத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்காத எந்தவொரு ஊடகமும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது போலவே, தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்காத எந்த ஒரு ஊடகமும் வியாபார அளவில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது தான் யதார்த்தம். இந்த இடத்தில் இருந்து உங்கள் பார்வைகளை விசாலப்படுத்துங்கள் மேலும் பல உண்மை நிலைகளை அறிந்து கொள்வீர்கள்.
தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..?

அடிப்படையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மையாகவே பாலஸ்தீன தீர்வு முயற்சியிலும் தன்னை ஆக்கிக் கொண்டிருந்தது. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச் செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணுக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக் கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகிறது நோர்வே. நோர்வேயின் நடவடிக்கைகள் குறித்து பேரினவாதிகள் சந்தேகிப்பதற்கும் தமிழ் மக்கள் சந்தேகிப்பதற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் உண்டு என்பதையும் கவனியுங்கள்.
மாற்று அரசியலின் தேவை பற்றி..

தமிழ்த்தேசிய விடுதலையுடன் நமது தேவை நின்றுவிடவில்லை. இன்றைய முதன்மைத் தேவை என்கிற பேரில் ஏனைய சமூக அடக்குமுறைகள், ஏற்றத் தாழ்வுகள் என்பவற்றுக்கெதிரான போராட்டம் மறுக்கப்பட்டு வருவதை கண்மூடித்தனமாக தமிழ்தேசம் எதிர்கொண்டபடி இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை, சாதியம், பிரதேசவாதம், பால்வாதம், என்கிற விடுதலையின் தேவை இல்லாமல் போய்விடவில்லை. மேற்பூச்சுக்காக இன்று இவற்றையும் உள்ளடக்கியது தான் இன்றைய தேசப்போராட்டம் என்று கூறப்பட்டாலும் கூட, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்குரிய எந்த நம்பிக்கையையும் இன்னும் கிஞ்சித்தும் காணவில்லை.

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது. அதற்கப்பாற்பட்ட போராட்டத்தின் தேவை இன்னமும் உள்ளது.


-நேர்காணல்- தாஸ்

No comments: