Sunday, June 14, 2020

யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்

-கரவைதாசன்-
இலங்கைக் கொடியின் கீழ் "யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக காணமல்ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள், மஞ்சள் தபால் உறைகளில் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடும் அன்னையர்கள் அல்லது மனைவிமார் உட்பட Inform அமைப்பினைச் சேர்ந்த நண்பர் றூக்கி பெர்ணான்டோவின் விபரம், கருத்துக்கள், ஊடகவியலாளர்களின் களவிபரம் போன்ற விசயதானங்கள் கட்டுரை எங்கும் பரவிக்கிடந்தன. கட்டுரையின் மையப் புள்ளியாக கூறப்படுவது. இலங்கை நாட்டின் அதிபர் கோதபாய ராஜபக்ச சொல்கிறார் காணமல் போனவர் யாவரும் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெயரில் அவர்களின் குடுபங்களுக்கு இலங்கை ரூபா.6000 ஜீவனாம்சப் பணமாக மாதமாதம் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே. ஆனால் அன்னையர்களில் கேள்வி கேட்போரின் கோரிக்கை எங்களுக்கு பணம் வேண்டாம் காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிலவரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்பதே. உறுதிப்படுத்துங்கள் எனக் கேட்பது கருத்துச் சுதந்திரம். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வாருங்கள் அபிவிருத்தியினை நோக்கிப் போவோம் என்பது மறுபக்க நியாயம். கட்டுரையை படித்து முடித்ததும் எனக்குள் சிந்தனைச் சிதறல் யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சுப்போட்டு எரிச்சதுக்கான எந்த தடயமும் இல்லாமல் புதிதாக ஒரு கட்டடத்தினைக் கட்டித்தந்ததும் அதனை யார் திறப்பது என சண்டை பிடியுங்கள் எனவிட்டதுக்கும் இந்த பொறிமுறைக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ?
-கரவைதாசன்-

No comments: