Tuesday, March 25, 2014

இரத்தோட்டையில் ஓர் இலக்கிய நிகழ்வு.

 -எம்.முத்துக்குமார்-
பாக்யா பதிப்பகமும் நூலகம் நிறுவனமும் இணைந்து நடாத்திய மலையக ஆவணக மற்றும் நூலறிமுக நிகழ்வுகள் மாத்தளை ரத்தொடடை நகரில் இடம்பெற்றது. ரத்தொட்டை உதயம் சமூக நலன்புரிச் சங்கம்  ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் மலையக நூல்கள் ஆவணங்களை எண்ணிமப்படுத்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நூலகம் நிறுவனத்தினர் செயலமர்வுகளை நடாத்தினர்.

நூலகம் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டாளர் சேரன் நூல்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார். ஏதொ ஒரு காரணத்திற்காக யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டுவிட்டது. அப்போது எரிந்து சாம்பலான நூல்கள் இப்போது எம்மிடத்தில் இல்லை. ஆனால் இப்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியினூடாக இணையத்தில் அதனை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறோம். இதுவரை 13000 க்கும் மெற்பட்ட நூல்கள் ஆவணங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இலவசமாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி நேரடியாக கணிணியினூடாக செயன்முறை விளக்கமும் அளித்தார்.

எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பாக செயன்முறை விளக்கமளித்து உரையாற்றிய தன்னார்வ செயற்பாட்டாளர் மயூரன்  பாடசாலைகளில் ஆலயங்களில்  சமூகத்தளங்களில்  வெளியிடப்படும் சஞ்சிகைகள் கூட இவ்வாறு கணிணியூடாக பத்திரப்படுத்த முடியும். இதன் மூலம் நமது ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று இலத்திரணியல் பள்ளிக்கூடம் எனும் முறையினூடாக மாணவர்கள் எவ்வாறு தமது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பாக தன்னார்வ செயற்பாட்டாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர் நந்தகுமார் விளக்கமளித்தார். மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்கள் உள்ளிட்ட பயிற்சிக்குரிய மாதிரி வினாத்தாள்களை இந்த இணையத்தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்கள் முகநூல் வலைத்தளம் போன்று இந்தத் தளத்தின் ஊடாக தங்களது பாடவிதானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் எனவும் செயன்முறையுடன் விளக்கினார்.

இதனுடன் இணைந்த சிறப்பு நிகழ்வாக அல்அஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. கவிஞர் அல் அஸ்மத் அவர்கள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய அறுவடைக்கனவுகள் எனும் நாவலை அறிமுகம் செய்து மல்லியப்புசந்தி திலகர் நயப்புரை வழங்கினார்.

ஏற்புரை வழங்கிய கவிஞர்.அல்அஸ்மத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு வேலாயுதமாகிய அஸ்மத்  பிறந் மண்ணுக்கு வந்திருக்கிறேன். அதுவும் இந்த மண்ணில் எனது நூலை அறிமுகப்படுத்தக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என தெரிவித்தார்.

‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ நூல் பற்றி கருத்துரை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை மலரன்பன் தானே சிறந்த இலக்கியவாதி எனும் புலமைச் செருக்குடன் விளங்கிய ஜெயகாந்தனிடம் உங்களுக்கு அடுத்து சிறந்த எழுத்தாளன் என நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள் எனக் கெட்டபோது அவர் தனக்குப்பின் ‘ஜெயமோகன்’ தான் சிறந்த எழுத்தாளர் என்றார். அந்த ஜெயமோகனே அழைத்து நமது தெளிவத்தைக்கு விருது வழங்கி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் தானெ தொகுத்து வெளியிடுகிறார் எனில் அது மலையகத்திற்கும் மலையகத்தில் எழுதிக்கொண்டிருப்போருக்கும் கிடைத்த பெருமையாகும் என தெரிவித்தார். தெளிவத்தையின் சிறுகதைகள் குறித்து அதிகம் பேசலாம். உவமைகளைக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே. நிறைந்த நுட்பங்களுடன் பல்வெறு சிக்கலான விடயங்களையும் கதைக்குள் கொண்டுவந்தவிடும் அவரகது லாவகம் வனப்புவாய்ந்தது. மீன்கள் கூனல் பொன்ற கதைகள் அழகியலுடன் அழமாக மலையக மக்களின் வாழ்வியல் பேசுகின்ற கதைகள் என தெரிவித்தார். 

கலைஞர். மாத்தளை கார்த்திகேசு எம்.எம்.பீர்முகம்மது ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியதுடன் அவர்களுக்கு சிறப்புபிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு  நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. ‘உதயம்’ சமூக நலன்புரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் பிலிப் சேவியர் நேசன் ஆகியோருக்கும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் கருப்பையா ராஜா அவர்களுக்கும துரைவி பதிப்பகத்தின் ராஜ் பிரசாத் அவர்களுக்கும்  சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சிரேஷ்ட  எழுத்தாளர்கள் பாடசாலை மாணவர்களுடன் ஒன்று கலந்த இலக்கிய நிகழ்வாக விழா அமைந்திருந்தது.
நன்றி :நமதுமலையகம்

No comments: